- Home
- Tamil Nadu News
- திமுகவின் கட்டுக்கதைகளால் காமராஜர் வீழ்த்தப்பட்டார்: திருச்சி சிவாவுக்கு ஜோதிமணி பதிலடி
திமுகவின் கட்டுக்கதைகளால் காமராஜர் வீழ்த்தப்பட்டார்: திருச்சி சிவாவுக்கு ஜோதிமணி பதிலடி
திருச்சி சிவா எம்.பி. காமராஜர் குறித்துத் தெரிவித்த கருத்துக்களுக்கு ஜோதிமணி எம்.பி. கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காமராஜர் எளிமையின் உருவம் என்றும், சிவாவின் கருத்து உண்மைக்குப் புறம்பானது என்றும் அவர் கூறியுள்ளார்.

திருச்சி சிவாவுக்கு ஜோதிமணி பதிலடி
பெருந்தலைவர் காமராஜர் குறித்து தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா தெரிவித்த கருத்துக்களுக்கு, காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தனது முகநூல் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காமராஜர் எளிமைக்கு முற்றிலும் முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் என்பதை உலகம் அறியும் என்றும், திருச்சி சிவாவின் கருத்து உண்மைக்குப் புறம்பானது என்றும் அவர் சாடியுள்ளார்.
மரத்தடியில் உறங்கியவர் காமராஜர்
ஜோதிமணி தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:
"பெருந்தலைவர் காமராஜர் நேர்மைக்கும், நிர்வாகத்திறமைக்கும் மட்டுமல்ல, எளிமைக்கும் பெயர் போனவர் என்பதை உலகறியும். தமிழ்நாட்டில் காமராஜர் கால்தடம் படியாத இடம் ஏதாவது இருக்கிறதா என்று ஆச்சர்யப்படக்கூடிய அளவில் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பயணம் செய்தவர் பெருந்தலைவர் காமராஜர்.
அந்த மூலை முடுக்குகளில் எல்லாம் ஏசி அறைகளும், ஐந்து நட்சத்திர விடுதிகளும் இல்லை. ஒரு முதலமைச்சராக அரசினர் விடுதியில் தங்கி, வெப்பம் அதிகமாக இருந்தால் மரத்தடியில் கட்டிலைப் போட்டு உறங்கியவர் காமராஜர். தனக்குக் காவலாக நின்றவர்களைக் கூட உறங்கச் சொல்லிவிட்டு தனித்தே உறங்கிப் பழக்கப்பட்ட எளிமையாளர்.
ஏசி அறை இல்லாமல் உறங்கமாட்டாரா?
அவர் ஏசி அறை இல்லாமல் உறங்கமாட்டார் என்று சகோதரர் திரு திருச்சி சிவா அவர்கள் சொல்வது, உண்மைக்கு முற்றிலும் புறம்பானது. எமது தலைவர் காமராஜருக்கு எதிராக கடந்த காலத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பரப்பப்பட்ட கட்டுக்கதைகளின் தொடர்ச்சியாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது.
காமராஜர் வாழ்ந்த வீட்டிற்கு காங்கிரஸ் கட்சி வாடகை கொடுத்து வந்தது. அது அவரது சொந்த மாளிகை என்பது போன்ற தி.மு.க. பரப்பிய கட்டுக்கதைகளாலேயே காமராஜர் என்ற இந்த மண்ணின் மாபெரும் ஆளுமை தேர்தல் களத்தில் வீழ்த்தப்பட்டார் என்பது வரலாறு.
கட்டுக்கதைகளுக்கு சரியான பதிலடி
காமராஜருக்கு எதிராகப் பரப்பப்படுகிற கட்டுக்கதைகளுக்கு சரியான பதிலடி கொடுக்காமல் இருந்தால், காமராஜர் ஆன்மா நம்மை மன்னிக்காது. அவரின் பெயராலேயே காங்கிரஸ் கட்சி தமிழ் மண்ணில் இன்றளவும் அரசியல் களத்தில் நிற்கிறது என்பதை ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டரும் நினைவில் கொள்ள வேண்டும்."
இவ்வாறு ஜோதிமணி தனது முகநூல் பதிவில் கடுமையாக விமர்சித்துள்ளார். தி.மு.க. எம்.பி. திருச்சி சிவாவின் கருத்துக்கள், காமராஜரின் பிம்பத்தைக் கெடுக்கும் வகையில் உள்ளதாகவும், கடந்த காலங்களில் தி.மு.க. காமராஜருக்கு எதிராகப் பரப்பிய பொய்ப் பிரச்சாரங்களின் தொடர்ச்சியாகவே இதைப் பார்க்க முடியும் என்றும் ஜோதிமணி தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த கருத்து மோதல், அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.