- Home
- Tamil Nadu News
- பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்.. மணமகன்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்
பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்.. மணமகன்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் புதிய திருமண மண்டபத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், தனது வெற்றிக்கு தனது மனைவியே காரணம் என்று குறிப்பிட்டார்.

முதல்வர் ஸ்டாலின் பேச்சு
சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் பேரறிஞர் அண்ணா பெயரில் புதிய திருமண மண்டபத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, திருமண மண்டப வளாகத்தில் நிறுவப்பட்டிருந்த பேரறிஞர் அண்ணாவின் சிலையையும் அவர் திறந்து வைத்துப் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மணமக்களுக்காக சுவாரஸ்யமான அறிவுரைகளை பகிர்ந்து கொண்டார்.
அப்போது உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், “கொளத்தூர் என்ற பெயர் கேட்டாலே சாதனை அல்லது ஸ்டாலின் என்று நினைவு வரும் அளவுக்கு இந்தத் தொகுதியுடன் நான் இணைந்திருக்கிறேன். ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற அடிப்படையில் ஆட்சி நடத்தி வருகிறோம். பத்து நாட்களுக்கு ஒருமுறை கொளத்தூர் வரவில்லை என்று அமைச்சர் சேகர் பாபு விடமாட்டார் என்றும் நகைச்சுவையாக கூறினார்.
கொளத்தூர் மக்களிடமிருந்து அன்பும் வரவேற்பும் தனி மகிழ்ச்சி தருவதாக குறிப்பிட்ட அவர், “இந்த தொகுதியில் உள்ள மக்கள் என்னை தங்கள் வீட்டுப் பிள்ளையாக பார்க்கிறார்கள். அதுதான் எனக்கு பெரிய சந்தோஷம்” என்றார். மேலும், திமுக அரசு மக்கள் மனதில் நிலைக்கும் வகையிலான திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவதாகவும் கூறினார்.
மணமகன்களுக்கு அறிவுரை
கொளத்தூர் தொகுதியில் அரசு பெரியார் மருத்துவமனை மேம்படுத்தப்பட்டுள்ளது, வண்ண மீன் அங்காடி, விளையாட்டு மைதானங்கள், போட்டித் தேர்வுகளுக்கான ‘முதல்வர் படிப்பகம்’ போன்ற பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு முதலமைச்சர் விளக்கினார். மாநகராட்சி பள்ளிகள், மருத்துவமனைகள், நூலகங்கள் என பல வசதிகள் அதிகம் உள்ள தொகுதியாக கொளத்தூர் திகழ்வதாகவும் அவர் தெரிவித்தார்.
பெண்களுக்கு திமுக ஆட்சியில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக கூறிய ஸ்டாலின், “பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும். ஆணின் வெற்றிக்கு பின்னால் பெண் இருப்பார். என்னுடைய வெற்றிக்குப் பின்னாலும் என் மனைவிதான் காரணம்” என்று உணர்ச்சிபூர்வமாக பேசினார்.
மேலும், மிசா சிறையில் இருந்தபோது பல இன்னல்களை சந்தித்ததாக நினைவுகூர்ந்த அவர், “அந்த நேரங்களில் எனக்கு துணையாக நின்றது என் மனைவிதான். அதனால் தான் நான் சொல்கிறேன். பொண்டாட்டி சொன்னால் கேட்டுக்கொள்ள வேண்டும்” என மணமகனுக்கு அறிவுரை வழங்கினார். அவரது இந்த பேச்சு நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களிடையே சிரிப்பையும் கைதட்டலையும் ஏற்படுத்தியது.

