- Home
- Tamil Nadu News
- அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஸ்கெட்ச் போட்ட அமலாக்கத்துறை? வசமாக சிக்குவாரா? நாளை க்ளைமாக்ஸ்!
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஸ்கெட்ச் போட்ட அமலாக்கத்துறை? வசமாக சிக்குவாரா? நாளை க்ளைமாக்ஸ்!
டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் மற்றும் தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாகிறது.

TASMAC Case
TASMAC Case: டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை அமலாக்கத்துறை நடத்திய சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்க கோரி டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் மற்றும் தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் அமர்வில் விசாரணை நடைபெற்றது.
tamilnadu government
டாஸ்மாக் வழக்கு
அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன்: அமலாக்கத்துறை எப்போதும் வெளிப்படையாக இருந்ததில்லை. வெளிப்படையாக இருப்பதாக ஒரு பிம்பத்தை உருவாக்கி அதன் பின்னால் அமலாக்கத்துறை ஒளிந்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். எந்த நம்பிக்கையின் அடிப்படையில் குற்றம் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை கருதுகிறது? எதற்காக சோதனை செய்கிறோம்? என்பதை அமலாக்கத்துறை தெரிவிக்க வேண்டும். அமலாக்கத் துறையின் நடவடிக்கையால் நேரடியாக டாஸ்மாக்கின் நற்பெயருக்கும், மறைமுகமாக அரசின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளது.
TASMAC Raid
பெண் அதிகாரிகளை அடைத்து வைத்தது சரியா?
கடந்த 2007ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை முறைகேடு நடைபெற்றதாக கூறப்படும் நிலையில், தற்போது தான் ஞானம் வந்தது போல விசாரணை நடத்துவது ஏன்? எனவும் அரசு தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. மேலும் இன்றைக்கு டாஸ்மாக் குறிவைக்கப்படுகிறது. நாளை ஒவ்வொரு துறையும் குறிவைத்து விசாரணை நடத்தப்படும். விசாரணை என்ற பெயரில் பெண் அதிகாரிகளை அடைத்து வைத்து நள்ளிரவில் வீட்டுக்கு அனுப்பியது சரியான நடத்தையா? என கேள்வி எழுப்பப்பட்டது.
Enforcement Directorate
சட்டவிரோத பணப் பரிமாற்றம்
இதனையடுத்து அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர்: மாநில காவல்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த 42 வழக்குகளின் அடிப்படையிலேயே அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்ததாகவும், முறைகேடு நடந்திருப்பதாக கருதினால் அமலாக்கத்துறை விசாரணை நடத்தலாம். டாஸ்மாக் ஊழியர்கள் லஞ்சம் வாங்கியதாக முதல் தகவல் அறிக்கையில் உள்ளதாகவும், சிலர் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக தகவல் கிடைத்ததால் சோதனை நடத்தப்பட்டது. டாஸ்மாக் முறைகேடு மூலம், ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்தது சோதனையில் தெரியவந்துள்ளதாக வாதிட்டார்.
chennai high court
நாளை தீர்ப்பு வெளியாகிறது
தொடர்ந்து இந்த வழக்கில் இறுதி விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது டாஸ்மாக் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் அமலாக்கத்துறைக்கு சோதனை நடத்த அதிகார வரம்பு இல்லை. ஆதாரங்கள் இல்லாமல் மிகப் பெரிய ஊழல் நடைபெற்றதாக அமலாக்கத்துறை எவ்வாறு சொல்ல முடியும்? என்றும் கேள்வி எழுப்பினார். அனைத்து தரப்பு வாதங்களும் காரசாரமாக நடந்த நிலையில் தீர்ப்பு நாளை வழங்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். தமிழக அரசின் கோரிக்கை ஏற்றுக்கொண்டு அமலாக்கத்துறை நடத்திய சோதனையை சட்டவிரோதமானது அறிவிக்குமா? அல்லது தமிழக அரசின் மனு தள்ளுபடி செய்யப்படுமா? என்பது தெரியவரும்.தமிழக அரசின் மனு தள்ளுபடி செய்யும் பட்சத்தில் அந்த துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.