வெட்கக்கேடு! தமிழகத்திற்கு தலைகுனிவு! முதல்வர் ஸ்டாலினை விளாசிய அண்ணாமலை!
மும்மொழிக் கொள்கை மூலம் பாஜக அரசு தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க முயல்வதை திமுக கண்டிப்பதால் அதற்கு பழிவாங்கும்விதமாக அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதாக திமுகவினர் குற்றம்சாட்டினார்கள்.

அமலாக்கத்துறை சோதனை விவகாரத்தில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். தமிழ்நாட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜி நெருங்கிய நண்பரான எம்சிஎஸ் சங்கர், கொங்கு மெஸ் சுப்பிரமணி, சக்தி மெஸ் கார்த்திக் உள்ளிட்டோரின் வீடு அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் இன்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.
அமலாக்கத்துறை சோதனை
அமைச்சர் செந்தில் பாலாஜி வசம் இருக்கும் மதுவிலக்குத்துறையின் கீழ் இயங்கும் சென்னை எழும்பூரில் தாளமுத்து நடராஜர் மாளிகையில் உள்ள தமிழ்நாடு டாஸ்மாக் தலைமை அலுவலகம், அம்பத்தூரில் உள்ள டாஸ்மாக் கிடங்கு அலுவலகம், சென்னை பாண்டி பஜாரில் உள்ள திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான அக்கார்டு டிஸ்டில்லர்ஸ் நிறுவனம், ஆயிரம் விளக்கில் உள்ள எஸ்.என்.ஜே மதுபான நிறுவனத்தின் அலுவலகம், சென்னை தி.நகரில் உள்ள Kals Distilleries உள்ளிட்ட மதுபான நிறுவனங்களின் அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அமலாக்கத்துறை
மேற்கண்ட நிறுவனங்கள் டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானம் விநியோகம் செய்யும் நிறுவனங்களாகும். டாஸ்மாக்கிற்கு மதுபானம் விநியோகம் மற்றும் கொள்முதலில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்ததை தொடர்ந்து அமலாக்கத்துறையினர் இந்த சோதனையில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது. அமலாக்கத்துறையின் சோதனைக்கு திமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
மும்மொழிக் கொள்கை மூலம் பாஜக அரசு தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க முயல்வதை திமுக கண்டிப்பதால் அதற்கு பழிவாங்கும்விதமாக அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதாக திமுகவினர் கருத்துகளை கூறி வருகின்றனர். இந்நிலையில், அமலாக்கத்துறை சோதனை தொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதிலடி
இது தொடர்பாக அண்ணாமலை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''தமிழக அரசு நிறுவனத்தில் இன்று அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு, தலைமைச் செயலகத்தில் வருமானவரித்துறை நடத்திய சோதனை தமிழகத்திற்கு தலைகுனிவு என்றீர்களே, இன்று நடப்பது என்ன, ஸ்டாலின் அவர்களே.
ஊழல் நாடாக தமிழ்நாட்டை மாற்றி, அரசு நிறுவனங்களை கமிஷன் மையங்களாக இயக்கியதன் விளைவு, இன்று டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை செய்யும் அளவுக்கு கொண்டு வந்துள்ளது. பன்மொழி கற்கும் உங்கள் கட்சிக்காரரின் குழந்தையை அழைத்து, இருமொழி கற்பதன் நன்மைகள் என்று ஒரு காணொளியை வெளியிடச் செய்து இந்தச் செய்தியை வழக்கம்போல திசைதிருப்ப முடியுமா என்று பாருங்கள். வெட்கக்கேடு'' என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் குற்றங்கள் குறைவு! லிஸ்ட் போட்ட அரசு! எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி!