- Home
- Tamil Nadu News
- சென்னை
- பவள விழா பாப்பாவுக்கு பழைய தகர டப்பாவை உருட்டத்தான் தெரியும்... திமுகவை பொளந்துகட்டிய விஜய்
பவள விழா பாப்பாவுக்கு பழைய தகர டப்பாவை உருட்டத்தான் தெரியும்... திமுகவை பொளந்துகட்டிய விஜய்
தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவை தவெகவினர் இன்று கொண்டாடி வரும் நிலையில், பனையூரில் நடைபெற்ற விழாவில் அக்கட்சி தலைவர் விஜய் என்ன பேசினார் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Vijay Speech in TVK 3rd Year Anniversary
தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவில் உரையாற்றிய நடிகர் விஜய், திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளை நேரடியாகக் குறிவைத்து கடும் விமர்சனங்களை முன்வைத்தார். எம்ஜிஆர் மீது முன்பு வைக்கப்பட்ட விமர்சனங்களையே இன்று தன் மீதும் வைக்கப்படுவதாக கூறிய அவர், “பவள விழா பாப்பாவுக்கு பழைய தகர டப்பாவை உருட்டத்தான் தெரியும்” என தன்னை விமர்சிக்கும் அரசியல் கட்சிகளை கடுமையாக சாடி பேசி இருந்தார்.
விஜய் ஸ்பீச்
விழாவில் பேசிய விஜய், “நமது கட்சியின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவை இன்று கொண்டாடுகிறோம். இன்றைக்கு தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய அரசியல் இயக்கமாக தவெக வளர்ந்து நிற்கிறது என்றால், அதற்கு முழுக் காரணமும் நீங்கள் தான். நம்மை அன்புடன் ஆதரிக்கும் கோடிக்கணக்கான மக்களே எங்களுடைய உண்மையான பலம். உங்கள் நம்பிக்கையில்தான் நானும், இந்தக் கட்சியும் பயணிக்கிறோம்” என உருக்கமாக தெரிவித்தார்.
வெடியைக் கொளுத்திடலாமா
இதை சொல்லியே உங்களுக்கு உணர்த்த வேண்டிய அவசியமில்லை; இது உங்களுக்கே தெரிந்த விஷயம் என்றும், கட்சியினர் அனைவருக்கும் வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்தார். பின்னர் வழக்கமான பாணியில், “மைக்கைப் பிடிச்சாச்சு… வெடியைக் கொளுத்தி விடலாமா?” என்று விஜய் கேட்டதும் தொண்டர்கள் ஆரவாரம் செய்து அவரை உற்சாகமூட்டினர்.
தொடர்ந்து அரசியல் வரலாற்றை நினைவுகூர்ந்த விஜய், “1977ஆம் ஆண்டு ஜூன் மாதம் எம்ஜிஆர் ரேடியோவில் பேசியபோது, அண்ணாதுரை அமர்ந்திருந்த இடத்தில் இப்படிப்பட்டவர்கள் அமர்ந்திருக்கிறார்கள் என்று நினைத்து கண்ணீர் விட்டதாக கூறினார். அந்தக் கண்ணீரை துடைக்க உருவான இயக்கமே அதிமுக என்று எம்ஜிஆர் சொன்னார் என விஜய் தெரிவித்தார்.
மக்களின் கண்ணீரை துடைக்க உருவான இயக்கம் இது
அதேபோல், 2017 மற்றும் 2021க்கு பிறகு தமிழக அரசியல் நிலையை பார்த்த மக்கள், காமராஜர், அண்ணாதுரை, எம்ஜிஆர் அமர்ந்த இடத்தில் இப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்களே என்று வேதனைப்பட்டதாக விஜய் கூறினார். “அந்த மக்களின் கண்ணீரை துடைக்க உருவான இயக்கமே தமிழக வெற்றிக் கழகம்” எனவும் அவர் வலியுறுத்தினார்.
பவள விழா பாப்பா
இவ்வாறு பேசுவதால் சிலர் இயல்பாகவே கொந்தளிப்பார்கள் என்றும், எம்ஜிஆர் கட்சி தொடங்கிய காலத்திலும், தேர்தலில் வெற்றி பெற்றபோதும் ‘ஒரு நடிகரின் கட்சி சட்டசபைக்கு வந்துவிட்டது’ என கேலி, கிண்டல் செய்தார்கள். “யார் அரசியலுக்கு வந்தாலும் அதிர்ச்சி அடைவதும், விமர்சனம் செய்வதும் அவர்களின் வழக்கம்” என்றார்.
மேலும், “அவர்கள் செய்யும் அட்டூழியங்கள், ஊழல்கள் பற்றி நாம் பேசத் தொடங்கினாலே, 50 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்திய அதே பழைய தகர டப்பாவை எடுத்து உருட்ட ஆரம்பித்து விடுவார்கள்” என கூறி தனது உரையை முடித்தார்.

