#ENGvsIND கேஎல் ராகுல்-மயன்க் அகர்வால் இருவரில் யாரை ரோஹித்துடன் தொடக்க வீரராக இறக்கலாம்? வாசிம் ஜாஃபர் அதிரடி
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மாவுடன் மயன்க் அகர்வால் - கேஎல் ராகுல் ஆகிய இருவரில் யாரை தொடக்க வீரராக இறக்கலாம் என்று வாசிம் ஜாஃபர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. ஆகஸ்ட் 4ம் தேதி முதல் இந்த தொடர் தொடங்குகிறது. மிக நீண்ட தொடரை இங்கிலாந்தில் இந்திய அணி எதிர்நோக்கியுள்ள நிலையில், அண்மைக்காலமாக இந்திய அணியில் ரோஹித் சர்மாவுடன் தொடக்க வீரராக இறங்கிவந்த ஷுப்மன் கில் காயம் காரணமாக முதல் சில போட்டிகளில் ஆடாத சூழலில், கேஎல் ராகுல் - மயன்க் அகர்வால் ஆகிய இருவரில் யார் ரோஹித் சர்மாவுடன் தொடக்க வீரராக இறங்குவார் என்பது பெரும் கேள்வியாக உள்ளது.
ஏனெனில் கேஎல் ராகுல் - மயன்க் அகர்வால் ஆகிய இருவருமே மிகச்சிறந்த பேட்ஸ்மேன்கள். இவர்கள் இருவரையும் பின்னுக்குத்தள்ளி இந்திய அணியில் வாய்ப்பு பெற்ற ஷுப்மன் கில் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ளாத நிலையில், காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிராக ஆடமுடியாத சூழல் உருவாகியுள்ளது.
எனவே இது ராகுல் மற்றும் மயன்க் ஆகிய இருவருக்குமே இந்திய டெஸ்ட் அணியில் கம்பேக் கொடுக்க நல்வாய்ப்பாக அமைந்துள்ளது. ஆனால் அவர்கள் இருவரில் யாருக்கு ரோஹித்துடன் தொடக்க வீரராக இறங்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பது பெரும் கேள்வியாக உள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள வாசிம் ஜாஃபர், மயன்க் அகர்வால் மற்றும் கேஎல் ராகுல் ஆகிய இருவருக்குமே இந்த தொடர் மிகப்பெரிய வாய்ப்பு. ஏனெனில் 5 டேஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் என்பது மிகப்பெரிய தொடர். எனவே இது மிகச்சிறந்த வாய்ப்பு. ராகுல் - மயன்க் அகர்வால் ஆகிய இருவரில் என்னுடைய தேர்வு மயன்க் அகர்வால் தான். ஏனெனில், நன்றாக சென்றுகொண்டிருந்த மயன்க் அகர்வாலின் கெரியரில் ஆஸி., தொடரில் வெறும் 2 போட்டிகளில் சரியாக ஆடாததற்காக நீக்கப்பட்டார். எனவே அவர் தனக்கான வாய்ப்புக்காக கண்டிப்பாக காத்திருப்பார். அதனால் அதை சரியாக பயன்படுத்திக்கொள்வார். கேஎல் ராகுலுக்கும் மிடில் ஆர்டரில் ஆட வாய்ப்பளிக்கலாம் என்று வாசிம் ஜாஃபர் கருத்து தெரிவித்துள்ளார்.