ஹோட்டல் கிடைக்காததால், வீட்டிற்கு சென்ற கோலி: காரில் வந்து சென்று பயிற்சி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடக்கும் நிலையில், விராட் கோலி தனது வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார்.
Image credit: Getty
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Image credit: PTI
இதன் மூலம் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி இன்று டெல்லியில் நடக்கிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. மேட் ரென்ஷாவிற்குப் பதிலாக டிரேவிஸ் ஹெட் மற்றும் ஸ்காட் போலந்திற்கு பதிலாக மேத்யூ குன்மேன் அணியில் இடம் பெற்றுள்ளனர். மேத்யூ குன்மேனிற்கு இது முதல் டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போன்று இந்திய அணியிலும், முதல் டெஸ்ட் போட்டியின் மூலம் தனது முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான சூர்யகுமார் யாதவ்விற்குப் பதிலாக காயம் காரணமாக ஓய்வில் இருந்த ஷ்ரேயாஸ் ஐயர் இந்தப் போட்டியில் களமிறங்கியுள்ளார். இந்திய அணியின் வீரர் சட்டீஸ்வர் புஜாரா தனது 100ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுகிறார்.
100ஆவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் புஜாராவின் போட்டியைக் காண்பதற்கு அவரது தந்தை, மனைவி மற்றும் மகள் ஆகியோர் வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் விளையாடும் போட்டிகள் என்றால் இந்திய அணி எப்போதும் தாஜ் பேலஸ் ஹோட்டல் அல்லது ஐடிசி மௌரியா ஆகிய 5 ஸ்டார் ஹோட்டல்களில் தான் தங்குவது வழக்கம்.
Image credit: PTI
ஆனால், திருமண முகூர்த்த நேரம் மற்றும் ஜி20 மாநாடு காரணமாக டெல்லியில் உள்ள அனைத்து ஹோட்டல்களும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக டெல்லியில் உள்ள லீலா ஹோட்டல்களில் இந்திய அணியினர் தங்க வைக்கப்பட்டனர்.
Image credit: PTI
ஆனால், ஹோட்டல் கிடைக்காத நிலையில், விராட் கோலி அதிரடியாக ஒரு முடிவு எடுத்தார். விராட் கோலி பிறந்து வளர்ந்தது எல்லாம் டெல்லி தான். அவரது குடும்ப உறவினர்கள் எல்லாம் டெல்லியில் தான் வசிக்கிறார்கள்.
இதனால், ஹோட்டல் கிடைக்காமல் இருந்த நிலையில், விராட் கோலி மட்டும் இந்திய அணியிலிருந்து விலகிச் சென்று நேரடியாக அவரது சொந்த வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார்.
வீட்டிலிருந்து மைதானத்திற்கு தனது காரில் வந்து கொண்டிருந்த போது விராட் கோலி கூறியிருப்பதாவது: பல வருடங்களுக்குப் பிறகு டெல்லியில் நீண்ட தூரம் பயணமாக மைதானத்தை நோக்கி காரில் செல்கிறேன். அத்தகைய ஏக்க உணர்வு என்று சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி ஹோட்டலிலிருந்து இந்திய அணியினர் வருவதற்கு முன்னதாக விராட் கோலி தனது காரில் புறப்பட்டு டெல்லி மைதானத்திற்கு வந்து பேட்டிங் பயிற்சியை மேற்கொண்டார். மேலும் ஸ்லிப்பில் கேட்ச் பிடிப்பதற்கு என தனி பயிற்சியும் அவர் மேற்கொண்டார். அதுமட்டுமின்றி டெல்லியில் பயிற்சி செய்த இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு ஆலோசனையும் வழங்கியுள்ளார்.
Image credit: PTI
இந்திய அணி வருவதற்கு முன்பே வந்த விராட் கோலி, பயிற்சி முடிந்து அவர்கள் சென்ற பிறகு அதிக நேரம் பயிற்சி செய்து விட்டு தனது சொந்த வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால், போட்டி தொடங்கிய பிறகு விராட் கோலில் அவரது சொந்த வீட்டிற்கு செல்வதற்கு வாய்ப்பு குறைவு என்று சொல்லப்படுகிறது.
இந்த டெஸ்ட் போட்டியில் விராட் கோலில் 52 ரன்கள் எடுத்தால் சர்வதேச கிரிக்கெட்டில் 25 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைப்பார். ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்த ஆஸ்திரேலியா இந்தப் போட்டியில் வெற்றி பெற கடுமையாக போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.