#IPL2021Auction உமேஷ் யாதவை ஐபிஎல் அணிகள் எடுக்க விரும்பாதது ஏன்..? இதுதான் காரணம்
நல்ல அனுபவம் வாய்ந்த ஃபாஸ்ட் பவுலராக இருந்தாலும் கூட, உமேஷ் யாதவ் மீது ஏன் ஐபிஎல் அணிகள் ஆர்வம் காட்டவில்லை என்று முன்னாள் விக்கெட் கீப்பர் சபா கரீம் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 14வது சீசனுக்கான ஏலம் நேற்று சென்னையில் நடந்தது. முழுக்க முழுக்க ஃபாஸ்ட் பவுலர்களுக்கான ஏலமாக இது இருந்தது. ஃபாஸ்ட் பவுலர்களுக்கு கிராக்கி அதிகமாக இருந்ததால், கிறிஸ் மோரிஸ்(ரூ.16.25 கோடி), கைல் ஜாமிசன்(ரூ.15 கோடி), ஜெய் ரிச்சர்ட்ஸன்(ரூ.14 கோடி), மெரிடித்(ரூ.8 கோடி) ஆகியோர் அதிக விலைக்கு ஏலம்போனார்கள்.
வெளிநாட்டு ஃபாஸ்ட் பவுலர்களுக்கு அதிக கிராக்கி இருந்த நிலையில், உள்நாட்டு ஃபாஸ்ட் பவுலரான உமேஷ் யாதவ் வெறும் ஒரு கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். 121 ஐபிஎல் போட்டிகளில் ஆடி 119 விக்கெட்டுகளை வீழ்த்திய நல்ல அனுபவம் வாய்ந்த பவுலர் உமேஷ் யாதவ். ஐபிஎல்லில் மட்டுமல்லாது, சர்வதேச கிரிக்கெட்டிலும் 48 டெஸ்ட், 75 ஒருநாள் போட்டிகளில் ஆடி முறையே 148 மற்றும் 106 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் நிறைய ஆடியிருந்தாலும், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வெறும் 7 போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார் உமேஷ் யாதவ்.
140 கிமீ வேகத்திற்கு மேல் வீசக்கூடியவர் என்றாலும், லைன் மற்றும் லெந்த்தில் கோட்டைவிட்டு, அதிக ரன்களை வாரிவழங்கிவிடுவார். அந்தவகையில், ஆர்சிபி அணியால் கழட்டிவிடப்பட்ட உமேஷ் யாதவை அவரது அடிப்படை விலையான ரூ.1 கோடிக்கு டெல்லி கேபிடள்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.
உமேஷ் யாதவ் மீது எந்த அணியும் ஆர்வம் காட்டாதது குறித்து பேசியுள்ள முன்னாள் விக்கெட் கீப்பர் சபா கரீம், உமேஷ் யாதவ் டெஸ்ட் கிரிக்கெட்டில் நல்ல அனுபவம் கொண்ட பவுலர். ஆனால் டி20 போட்டிகளில் அவர் இந்திய அணியில் பெரும்பாலும் எடுக்கப்படுவதில்லை. ஐபிஎல் அணிகள் அவர் மீது ஆர்வம் காட்டாததற்கு, அவரது டிராக் ரெக்கார்டு காரணமாக இருக்கலாம். இப்போதெல்லாம் ஐபிஎல் அணிகள் நன்றாக ஹோம் ஒர்க் செய்துவிட்டு ஏலத்திற்கு வருகின்றனர். அதனால்தான், உமேஷ் யாதவ் போன்ற அனுபவம் வாய்ந்த இந்திய பவுலர்களை விட வெளிநாட்டு ஃபாஸ்ட் பவுலர்கள் மீது ஆர்வம் காட்டுகின்றனர் என்று சபா கரீம் தெரிவித்தார்.