ஐபிஎல் 2020: கடைசி நிமிடத்தில் சிஎஸ்கேவிற்கு கிடைத்த செம குட் நியூஸ்
ஐபிஎல் 13வது சீசனின் முதல் போட்டியில் இன்று சிஎஸ்கே அணி, அதன் பரம எதிரியான மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்ளவுள்ள நிலையில், சிஎஸ்கே அணிக்கு கடைசி நேரத்தில் ஒரு குட் நியூஸ் கிடைத்துள்ளது.
ஐபிஎல் 13வது சீசன் இன்று தொடங்குகிறது. இரவு 7.30 மணிக்கு அபுதாபியில் நடக்கும் முதல் போட்டியில் சிஎஸ்கேவும் மும்பை இந்தியன்ஸும் மோதுகின்றன. சமபலம் வாய்ந்த, ஐபிஎல்லின் வெற்றிகரமான அணிகளாக கோலோச்சும் இரு அணிகளும் முதல் போட்டியில் மோதுவதால், ரசிகர்கள் பேராவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.
இந்த சீசன், தோனி தலைமையிலான சிஎஸ்கே அணிக்கு பெரும் சவாலாகவே இருக்கப்போகிறது. களத்தில் சிஎஸ்கே சவால்களை எதிர்கொள்வதற்கு முன்பாக, களத்திற்கு வெளியே பல சவால்களையும் பிரச்னைகளையும் எதிர்கொண்டது.
ரெய்னா, ஹர்பஜன் சிங் ஆகியோர் இந்த சீசனில் ஆடவில்லை.
சென்னையில் பயிற்சி முகாமில் இருந்தபோது சிஎஸ்கே வீரர்களுக்கு கொரோனா இல்லாமல் இருந்தது. ஆனால் துபாய் சென்றதும் செய்யப்பட்ட பரிசோதனையில் சிஎஸ்கே வீரர்கள் தீபக் சாஹர் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய இருவர் உட்பட அந்த அணியை சேர்ந்த 13 பேருக்கு தொற்று உறுதியானது.
அதனால் பதற்றம் தொற்றிக்கொண்டது. அதுமட்டுமல்லாது, மற்ற அணிகள் எல்லாம் பயிற்சியை தொடங்கிய நிலையில், கொரோனா பாசிட்டிவ் கேஸ்கள் இருந்ததால், சிஎஸ்கே மட்டும் தாமதமாக பயிற்சியை தொடங்கியது. சவால்களை எதிர்கொள்வதில் வல்லமை வாய்ந்த சிஎஸ்கே அணிக்கு இதெல்லாம் பெரிய விஷயமே கிடையாது.
தீபக் சாஹர் 2வதாக செய்யப்பட்ட பரிசோதனையிலேயே கொரோனாவிலிருந்து மீண்டுவிட்டார்; அவருக்கு நெகட்டிவ் என வந்தது.
ஆனால் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு மீண்டும் பாசிட்டிவ் என்று வந்ததால், அவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். இந்நிலையில், அவருக்கும் கொரோனா நெகட்டிவ் என வந்துவிட்டது. ருதுராஜ் கெய்க்வாட்டும் கொரோனாவிலிருந்து மீண்டுவிட்டார்.
23 வயதான இளம் வலது கை பேட்ஸ்மேனான ருதுராஜ் கெய்க்வாட், இளம் துடிப்பான, அதிரடியான பேட்ஸ்மேன். ஆஃப் ஸ்பின் பவுலிங்கும் வீசக்கூடியவர். அவரை இந்த சீசனில் அவரது அடிப்படை விலைக்கு சிஎஸ்கே எடுத்தது குறிப்பிடத்தக்கது.