#AUSvsIND ரிஷப் பண்ட், ஜடேஜாவிற்கு காயம்..! களத்திற்கு வராததால் ரசிகர்கள் அதிர்ச்சி.. இந்திய அணிக்கு பலத்த அடி
ஆஸி.,க்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் ரிஷப் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவரும் காயம் அடைந்தது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
இந்தியா ஆஸி., இடையே சிட்னியில் நடந்துவரும் 3வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸி., அணி முதல் இன்னிங்ஸில் 338 ரன்கள் அடித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 244 ரன்களுக்கு சுருண்டது. 94 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸி., அணி 3ம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் அடித்துள்ளது. மொத்தமாக 197 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது ஆஸி., அணி உள்ளது.
இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் ஆடும்போது, இந்திய வீரர்கள் ரிஷப் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவருக்கும் காயம் ஏற்பட்டது. பாட் கம்மின்ஸின் பவுன்ஸரில் ரிஷப் பண்ட்டின் இடது முழங்கையில் அடிபட்டது. வலியால் துடித்த அவரை ஃபிசியோ களத்திற்கு வந்து பரிசோதித்துவிட்டு சென்றார். அதைத்தொடர்ந்து பேட்டிங் ஆடிய அவர் 36 ரன்களுக்கே ஆட்டமிழந்தார். ரிஷப் பண்ட்டிற்கு ஸ்கேன் செய்யப்பட்ட நிலையில், 2வது இன்னிங்ஸில் அவர் விக்கெட் கீப்பிங் செய்ய வரவில்லை.
இதையடுத்து மிட்செல் ஸ்டார்க்கின் பவுன்ஸரில் இந்திய அணியின் மதிப்புமிக்க வீரரும் சிறந்த ஆல்ரவுண்டரும் அணிக்கு பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்துவகையிலும் சிறந்த பங்களிப்பை அளிக்கக்கூடியவருமான ரவீந்திர ஜடேஜாவின் இடது கை கட்டைவிரலில் அடிபட்டது. எனவே முதல் இன்னிங்ஸ் முடிந்ததும், ஜடேஜாவிற்கும் ஸ்கேன் செய்யப்பட்டது. அதனால் அவரும் முன்னெச்சரிக்கையாக 2வது இன்னிங்ஸில் ஃபீல்டிங் செய்ய களத்திற்கு வரவில்லை.
ஜடேஜாவின் காயம் குறித்த அப்டேட் வெளிவரவில்லை. ரிஷப் பண்ட், ஜடேஜா ஆகிய இருவரும் களத்திற்கு வராதது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்திருந்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத்தான் களத்திற்கு அனுப்பப்பட்டிருக்க மாட்டார்கள். அவர்களது காயம் இந்திய அணிக்கு பின்னடைவாக இருந்தாலும், காயம் குறித்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.