#IPL2021 உங்க செயல்பாட்டில் திருப்தி இல்ல.. கேப்டனையே கழட்டிவிடும் ஐபிஎல் அணி
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அந்த அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தை அடுத்த சீசனில் கழட்டிவிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில், கொரோனாவுக்கு மத்தியில் நடந்து முடிந்த நிலையில், அடுத்த சீசன் இந்தியாவில் நடக்கவுள்ளது. கூடுதலாக 2 அணிகளை சேர்க்கும் முடிவை ஓராண்டுக்கு பிசிசிஐ ஒத்திவைத்ததால், வரும் சீசனுக்கான ஏலம் சிறிய ஏலமாகவே நடக்கவுள்ளது.
இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தை கழட்டிவிட தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2018 ஐபிஎல்லில் ஸ்மித்தை ரூ.12.5 கோடிக்கு தக்கவைத்தது ராஜஸ்தான் அணி. 2018 ஐபிஎல்லில், பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடையில் இருந்ததால் ஆடவில்லை. 2019ல் மீண்டும் ராஜஸ்தான் அணியில் இணைந்த ஸ்மித், சீசனின் இடையே ரஹானே நீக்கப்பட்டு, கேப்டனாக்கப்பட்டார். கடந்த சீசனிலும் அவரது தலைமையில் தான் ராஜஸ்தான் அணி ஆடியது.
ஆனால் பேட்டிங் மற்றும் கேப்டன்சி ஆகிய இரண்டிலுமே சீராக சிறப்பான செயல்பாட்டை ஸ்மித் வழங்கவில்லை. சீசனின் தொடக்கத்தில் 2 அரைசதங்கள் அடித்த ஸ்மித், அதன்பின்னர் சொதப்பினார். மொத்தமாகவே கடந்த சீசனில் 311 ரன்கள் மட்டுமே அடித்தார். கேப்டன்சியிலும் பெரியளவில் சோபிக்கவில்லை. எனவே அவரை கழட்டிவிடுவதன் மூலம் பர்சில் பன்னிரண்டரை கோடியை சேர்த்துக்கொள்ள முடியும் என்பதால், அவரை கழட்டிவிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.