#ENGvsIND ஷுப்மன் கில்லுக்கு மாற்று வீரராக இலங்கையிலிருந்து இங்கிலாந்துக்கு பறக்கும் இளம் வீரர்?
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்று, ஆனால் காயம் காரணமாக விலகிய ஷுப்மன் கில்லுக்கு மாற்று வீரராக, இலங்கையில் இருக்கும் இளம் வீரர் ஒருவர் அனுப்பப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
விராட் கோலி தலைமையிலான இந்திய மெயின் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இங்கிலாந்தில் உள்ளது. அதனால் ரோஹித் சர்மா, பும்ரா, ஷமி, கேஎல் ராகுல், மயன்க் அகர்வால், ரிஷப் பண்ட், ஜடேஜா ஆகிய வீரர்கள் இங்கிலாந்தில் உள்ளனர்.
அதனால், ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களை கொண்ட அணி இலங்கைக்கு சென்றுள்ளது. இந்த தொடருக்கான பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். ராகுல் டிராவிட் பயிற்சியில், ஷிகர் தவானின் கேப்டன்சியில் இந்திய அணி இலங்கையை எதிர்கொள்கிறது.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த தொடக்க வீரர் ஷுப்மன் கில் காயத்தால் விலகியதையடுத்து, அவருக்கு பதிலாக கேஎல் ராகுல் - மயன்க் அகர்வால் ஆகிய இருவரில் ஒருவர் ரோஹித்துடன் தொடக்க வீரராக இறங்குவார். ஆனால் இது 5 டெஸ்ட் போட்டிகளை கொண்ட நீண்ட தொடர் என்பதால் பேக்கப் வீரர் ஒருவர் தேவை.
உள்நாட்டு போட்டிகளில் அபாரமாக ஆடி இந்திய அணியில் முதல் முறையாக இடம்பெற்றுள்ள அபிமன்யூ ஈஸ்வரன், அணியில் இருந்தாலும் கூட, இந்திய அணி சூழலில் ஏற்கனவே நன்றாக செட்டில் ஆகிவிட்ட மற்றும் தற்போதைய சூழலில் நல்ல ஃபார்மில் உள்ள ஒரு வீரர் தேவை என்ற வகையில் இலங்கையில் உள்ள பிரித்வி ஷா இங்கிலாந்துக்கு அனுப்பப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணி நிர்வாகம் பிரித்வி ஷா தேவை என்று நினைக்கும்பட்சத்தில், இலங்கையிலிருந்து பிரித்வி ஷா இங்கிலாந்துக்கு அனுப்பப்படுவார் என்று பிசிசிஐ அதிகாரி தெரிவித்திருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. எனவே பிரித்வி ஷா இங்கிலாந்துக்கு பறக்க வாய்ப்புள்ளது.