#AUSvsIND தேசிய கீதத்தின்போது கண்கலங்கியது ஏன்..? முகமது மனம் திறந்த முகமது சிராஜ்
ஆஸி.,க்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி சிட்னியில் தொடங்கும் முன், இந்திய தேசிய கீதம் ஒலித்தபோது கண்கலங்கிய இந்திய ஃபாஸ்ட் பவுலர் முகமது சிராஜ், கண் கலங்கியதற்கான காரணம் என்னவென்று, முதல் நாள் ஆட்டம் முடிந்த பின், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
முகமது சிராஜ் ஆஸி., சுற்றுப்பயணத்துக்கான டெஸ்ட் அணியில் இடம்பிடித்து ஆஸி., சென்று அங்கிருந்த நிலையில் தான், அவரது தந்தை இந்தியாவில் காலமானார். தந்தையின் இறுதிச்சடங்கிற்கு செல்ல, பிசிசிஐ அனுமதியளித்தும் கூட, நாட்டுக்காக ஆடுவது தான் முக்கியம் என்றும், அதுவே தனது தந்தையின் விருப்பம் என்றும் சொல்லிவிட்டு தந்தையின் இறுதிச்சடங்கில் கூட கலந்துகொள்ளாமல் ஆஸி.,யிலேயே இருந்தார் சிராஜ்.
2வது டெஸ்ட் போட்டியில் ஆடி அசத்தினார். இந்நிலையில், 3வது டெஸ்ட் போட்டிக்கான அணியிலும் இடம்பெற்றுள்ள சிராஜ், சிட்னியில் இந்திய தேசிய கீதம் ஒலிக்கும்போது நெகிழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார். அருகில் நின்ற பும்ரா அவரை தேற்றினார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் செம வைரலாகிவருகிறது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிவரும் ஆஸி., அணியின் முதல் விக்கெட்டை வீழ்த்தியதும் சிராஜ் தான். வார்னரை வெறும் ஐந்து ரன்களுக்கு வீழ்த்தினார் சிராஜ்.
முதல் நாள் ஆட்டம் முடிந்த பின் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், கண்கலங்கியதற்கான காரணத்தை தெரிவித்தார் சிராஜ். அதுகுறித்து பேசிய சிராஜ், அந்த தருணம் என் தந்தையை நினைத்து உணர்ச்சிவசப்பட்டேன். நான் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆட வேண்டும் என்று என் தந்தை விரும்பினார். நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடுவதை என் தந்தை பார்க்க வேண்டுமென்று விரும்பினேன். அதனால்தான் உணர்ச்சிமயத்தில் அழுததாக தெரிவித்தார் சிராஜ்.