இனிமேல் ரன் மேல் ரன் அடிச்சுக்கிட்டே இருக்கணும்: உஜ்ஜையின் கோயிலில் கேஎல் ராகுல் சாமி தரிசனம்!
மத்தியப்பிரதேசத்தில் உள்ள மகாகாலேஸ்வரர் ஜோதிர்லிங்க கோயிலுக்கு மனைவியுடன் சென்ற கேஎல் ராகுல் சாமி தரிசனம் செய்துள்ளார்.
கேஎல் ராகுல்
இந்தியா வந்த ஆஸ்திரேலியா அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா, 2ஆவது டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது.
கேஎல் ராகுல் துணை கேப்டன்
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் துணை கேப்டன் கேஎல் ராகுல் 71 பந்துகளில் ஒரு பவுண்டரி உள்பட 20 ரன்கள் எடுத்தார். 2ஆவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 41 பந்துகளில் ஒரு சிக்சர் உள்பட 17 ரன்களும், 2ஆவது இன்னிங்ஸில் 3 பந்துகளில் ஒரு ரன்னும் எடுத்து விமர்சனத்திற்கு உள்ளானார்.
கேஎல் ராகுல் - அதியா ஷெட்டி
இதைத் தொடர்ந்து வரும் மார்ச் 1 ஆம் தேதி மற்றும் மார்ச் 9 ஆம் தேதி நடக்கும் 3ஆவது மற்றும் 4ஆவது டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்திய அணியில் கேஎல் ராகுலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. எனினும், அவரது துணை கேப்டன் பதவி பறிக்கப்பட்டது. இந்த இரு டெஸ்ட் போட்டிகளில் அவர் சரிவர ஆடவில்லை என்றால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மகாகாலேஸ்வரர் ஜோதிர்லிங்க கோயில்
இதற்கு முன்னதாக வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 54 பந்துகளில் 3 பவுண்டரி உள்பட 22 ரன்களும், 2ஆவது இன்னிங்ஸில் 62 பந்துகளில் 3 பவுண்டரி உள்பட 23 ரன்களும் எடுத்தார். இதே போன்று 2ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 10 ரன்னும், 2ஆவது இன்னிங்ஸில் 2 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த இரு டெஸ்ட் போட்டிகளுக்கும் கேஎல் ராகுல் தான் கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது.
கேஎல் ராகுல் சாமி தரிசனம்!
தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் சொதப்பி வரும் கேஎல் ராகுலுக்கு கடைசி முறையாக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் பிரபலங்கள், விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜையின் கோயிலுக்கு மனைவியுடன் சென்ற கேஎல் ராகுல் இதுவரையில் டெஸ்ட் போட்டியில் சொதப்பிய நிலையில், இனிமேல் ரன் மேல் ரன் அடிக்கணும் என்று மகாகாலேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.