#ENGvsIND டெஸ்ட் தொடர்: நீ சரிப்பட்டு வரமாட்ட.. அனுபவ தொடக்க வீரரை நோக்கி நகரும் இந்திய அணி
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி இளம் தொடக்க வீரரை ஒதுக்கிவிட்டு, அனுபவ தொடக்க வீரரை இறக்க திட்டமிட்டுள்ளது.
இந்திய அணி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்திடம் தோற்று கோப்பையை இழந்த நிலையில், அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட நீண்ட தொடரில் ஆடுகிறது. அதற்காக, டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ஆடிவிட்டு இந்திய அணி இங்கிலாந்திலேயே தங்கியிருக்கிறது.
ஆஸி.,க்கு எதிரான டெஸ்ட் தொடரில் மயன்க் அகர்வால் காயத்தால் வெளியேறியதையடுத்து, இந்திய அணியின் தொடக்க வீரராக இறங்கிய ஷுப்மன் கில், அதைத்தொடர்ந்து இந்தியாவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் தொடக்க வீரராகவும் அவரே ஆடினார். ஆனால் இந்தியாவில் நடந்த அந்த தொடரில் கில் சரியாக ஆடவில்லை.
ஆனாலும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில், இங்கிலாந்தில் ஆடிய அனுபவம் கொண்ட கேஎல் ராகுல், மயன்க் அகர்வால் ஆகிய இருவருக்கும் உட்காரவைத்துவிட்டு, ஷுப்மன் கில்லுக்கு முன்னுரிமை கொடுத்து அவரை ரோஹித்துடன் தொடக்க வீரராக இறக்கியது இந்திய அணி. ஆனால் அந்த போட்டியில் ஆட கிடைத்த அரிய வாய்ப்பை கில் பயன்படுத்தி கொள்ளவில்லை. முதல் இன்னிங்ஸில் 28 ரன்கள் அடித்த கில், 2வது இன்னிங்ஸில் வெறும் 8 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். 2வது இன்னிங்ஸில் இந்திய அணிக்கு நல்ல தொடக்கம் கிடைக்காதது பெரும் பின்னடைவாக அமைந்தது.
இதற்கிடையே ஷுப்மன் கில்லுக்கு காயம் ஏற்பட்டிருப்பதால் ரோஹித் சர்மாவுடன் கேஎல் ராகுல் அல்லது மயன்க் அகர்வால் ஆகிய இருவரில் ஒருவரை தொடக்க வீரராக இறக்கவுள்ளது. கேஎல் ராகுல் 2018ம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் ஆடினார். மயன்க் அகர்வாலும் இங்கிலாந்தில் ஆடிய அனுபவம் கொண்டவர். மயன்க் அகர்வால் இந்தியா ஏ அணியில் உலகம் முழுதும் ஆடிய நல்ல அனுபவம் கொண்டவர் மட்டுமல்லாது, சிறந்த திறமைசாலியும் கூட என்பது குறிப்பிடத்தக்கது.