ஐபிஎல் 2020: நான் உங்களை ரொம்ப மிஸ் பண்றேன்; நீங்க..? சிஎஸ்கேவிற்கு ஹர்பஜன் சிங்கின் உருக்கமான மெசேஜ்
ஐபிஎல் 13வது சீசன் இன்று தொடங்கும் நிலையில், இந்த சீசனில் ஆடாத சிஎஸ்கே அணியின் அனுபவ, நட்சத்திர, சீனியர் ஸ்பின்னரான ஹர்பஜன் சிங், சிஎஸ்கே அணிக்கு உருக்கமான மெசேஜை சொல்லியுள்ளார்.
ஐபிஎல் 13வது சீசன் இன்று தொடங்குகிறது. அபுதாபியில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் மோதுகின்றன. ஐபிஎல்லில் வெற்றிகரமான அணிகளாக கோலோச்சும் 2 அணிகள், முதல் போட்டியில் மோதுவதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இந்த சீசனில் சிஎஸ்கே அணியின் அனுபவ, சீனியர், நட்சத்திர வீரர்களான ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் ஆகிய இருவரும் ஆடவில்லை. அவர்கள் ஆடாதது சற்று பின்னடைவுதான் என்றாலும், அவர்களின் இழப்பு பெரியளவில் பாதிக்காத அளவிற்கான வீரர்களை அணியில் பெற்றுள்ளது சிஎஸ்கே.
இன்று முதல் போட்டி தொடங்கும் நிலையில், இந்த சீசனில் ஆடாத ஹர்பஜன் சிங், தனது சிஎஸ்கே அணிக்கு உருக்கமான மெசேஜை சொல்லியுள்ளார்.
ஹர்பஜன் சிங் சீனியர் ஆஃப் ஸ்பின்னர். 2008ல் ஐபிஎல் தொடங்கியதிலிருந்து 2019 வரை அனைத்து சீசன்களிலும் ஆடியுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியில் 10 சீசன்களில் ஆடிய ஹர்பஜன் சிங், 2018லிருந்து சிஎஸ்கே அணியில் ஆடிவருகிறார்.
சீனியர் ஸ்பின்னரான ஹர்பஜன் சிங், பவர்ப்ளேயில் அருமையாக வீசி, கிறிஸ் கெய்ல் போன்ற காட்டடி வீரர்களை பவர்ப்ளேயில் கட்டுப்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்தி, சிஎஸ்கே அணிக்கு கடந்த 2 சீசன்களில் மிகச்சிறந்த பங்காற்றினார். அவரை போன்ற ஒரு சீனியர் ஸ்பின்னர், அதுவும் ஸ்பின் பவுலிங்கிற்கு சாதகமான ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் ஐபிஎல்லில் ஆடமுடியாமல் போனது, சிஎஸ்கே அணிக்கு இழப்புதான்.
இந்நிலையில், இந்த சீசனை தவறவிடுவது குறித்து இந்தியா டுடேவிற்கு அளித்த பேட்டியில் பேசிய ஹர்பஜன் சிங், ஐபிஎல்லில் எந்த அணி வேண்டுமானாலும் டைட்டிலை வெல்லலாம். இது டி20 கிரிக்கெட். எனவே என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். சிஎஸ்கே அணி அனுபவ வீரர்கள் நிறைந்த அணி. அதனால் நானோ ரெய்னாவோ ஆடாததெல்லாம் சிஎஸ்கேவை பெரியளவில் பாதிக்காது.
ஷேன் வாட்சன், தோனி, பிராவோ, ஜடேஜா என அனுபவ வீரர்களால் நிறையப்பெற்ற அணி சிஎஸ்கே. சிஎஸ்கேவை நான் இந்த சீசனில் மிஸ் செய்கிறேன். ஆனால் சிஎஸ்கே என்னை எந்தளவிற்கு மிஸ் செய்கிறது என்று தெரியவில்லை. நானோ ரெய்னாவோ இல்லாமலேயே சிஎஸ்கே சிறப்பாக செயல்படும். சிஎஸ்கே அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். எப்போதையும் போலவே இந்த சீசனிலும் சிஎஸ்கே அசத்தும் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
2008லிருந்து 2017 வரை மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடிய ஹர்பஜன் சிங்கை, 2018 ஐபிஎல் சீசனில், ரூ.2 கோடிக்கு சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்தது. இதையடுத்து கடந்த 2 சீசன்களாக சிஎஸ்கே அணியில் ஆடிவரும் ஹர்பஜன் சிங், சிஎஸ்கே அணியில் தொடர்கிறார். ஐபிஎல்லில் 160 போட்டிகளில் ஆடி 150 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடந்த சீசனில் 11 போட்டிகளில் ஆடி 16 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.