தனது முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டை வீழ்த்தி பஞ்சாப்பை பழிதீர்த்த அஷ்வின்..!
பஞ்சாப் அணியின் பவர்ப்ளேயின் கடைசி ஓவரை வீசிய அஷ்வின், அந்த ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார்.
ஐபிஎல் 13வது சீசனின் இன்றைய போட்டியில் டெல்லி கேபிடள்ஸும் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும் மோதுகின்றன. துபாயில் நடக்கும் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் கேஎல் ராகுல், டெல்லி அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.
டெல்லி அணி 13 ரன்களுக்கே தவான், பிரித்வி ஷா, ஹெட்மயர் ஆகிய 3 விக்கெட்டுகளையும் இழந்தது. அதன்பின்னர் ஷ்ரேயாஸ் ஐயரும் ரிஷப் பண்ட்டும் பார்ட்னர்ஷிப் அமைத்து 73 ரன்களை சேர்த்தனர். ரிஷப பண்ட் 31 ரன்னிலும், ஷ்ரேயாஸ் 39 ரன்களிலும் ஆட்டமிழக்க, டெத் ஓவரில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி 20 ஓவரில் அரைசதம் அடித்தார்.
ஸ்டோய்னிஸின் அதிரடியால் கடைசி 3 ஓவரில் டெல்லி அணிக்கு 57 ரன்களை குவித்தது. கிறிஸ் ஜோர்டான் வீசிய கடைசி ஓவரில் மட்டும் 30 ரன்களை கிடைத்தது. எனவே 20 ஓவரில் 157 ரன்களை அடித்து 158 ரன்களை பஞ்சாப் அணிக்கு இலக்காக நிர்ணயித்தது டெல்லி அணி.
இதையடுத்து 158 ரன்கள் என்ற இலக்குடன் பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் கேஎல் ராகுலும் மயன்க் அகர்வாலும் களத்திற்கு வந்தனர். மயன்க் அகர்வால் ஒருமுனையில் நிதானமாக நிற்க, மறுமுனையில் அடித்து ஆடிய ராகுல் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 19 பந்தில் 21 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து மயன்க் அகர்வாலுடன் ஜோடி சேர்ந்த கருண் நாயரை பவர்ப்ளேயின் கடைசி ஓவரை(ஆறாவது ஓவர்) வீசிய அஷ்வின், தனது முதல் பந்திலேயே வீழ்த்தினார். அதே ஓவரில் நிகோலஸ் பூரானையும் கிளீன் போல்டாக்கி டக் அவுட்டாக்கி வெளியேற்றினார். கடந்த 2 சீசன்களாக தான் கேப்டன்சி செய்த பஞ்சாப் அணியின் 2 முக்கியமான விக்கெட்டுகளை ஒரே ஓவரில் வீழ்த்தி பிரேக் கொடுத்தார்.
தன்னை கழட்டிவிட்ட பஞ்சாப் அணிக்கு எதிராகவே முதல் போட்டியை ஆடும் சூழல் அஷ்வினுக்கு உருவானது. அதை பயன்படுத்தி ஒரே ஓவரில் 2 விக்கெட்டை வீழ்த்தினார். மேக்ஸ்வெல்லும் ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, சர்ஃபராஸ் அகமதுவும் 12 ரன்னில் ஆட்டமிழக்க, பஞ்சாப் அணி, 10 ஓவரில் 55 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறிவருகிறது.