#IPL2021Auction ஐபிஎல் 14வது சீசனுக்கான ஏலத்தில் விலைபோக வாய்ப்பே இல்லாத 3 வீரர்கள்..!
ஐபிஎல் 13வது சீசனில் தங்களது அணிகளால் கழட்டிவிடப்பட்ட வீரர்களில் விலைபோக வாய்ப்பே இல்லாத 3 வீரர்கள் யார் யார் என்று பார்ப்போம்.
ஐபிஎல் 13வது சீசன் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பல்வேறு சவால்களை கடந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், 14வது சீசனுக்கான ஏலம் வரும் பிப்ரவரி 18ம் தேதி சென்னையில் நடக்கவுள்ளது. அதற்கு முன்பாக அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை வைத்துக்கொண்டு, தேவையில்லாத வீரர்களை கழட்டிவிட்டுள்ளது. அப்படி கழட்டிவிடப்பட்ட வீரர்களில், இனிமேல் எந்த அணியாலும் ஏலத்தில் எடுக்கப்பட வாய்ப்பே இல்லாத 3 வீரர்களை பார்ப்போம்.
1. கேதர் ஜாதவ்
கேதர் ஜாதவின் ஃபிட்னெஸ் எப்போதுமே அவருக்கு பெரிய பிரச்னையாக இருந்துவந்துள்ளது. 2018 ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் மட்டும் காயத்துடன் அடித்து ஜெயித்து கொடுத்துவிட்டு, அதன்பின்னர் அந்த சீசனில் ஆடவேயில்லை. கடந்த சீசனில் சிஎஸ்கே அணியின் ஆடும் லெவனில் கேதர் ஜாதவ் எதற்கு என்கிற கேள்வி எழுந்து அவர் மீது கடும் விமர்சனங்கள் எழுமளவிற்கு, எந்தவிதத்திலும் பங்களிப்பு செய்யாமல் இருந்தார் கேதர் ஜாதவ். பேட்டிங் ஆட கிடைத்த வாய்ப்புகளிலும், அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற எந்த நோக்கமும் இல்லாமல் ஆடினார். அது, டெத் ஓவர்களில் பெரிய ஷாட்டுகளை ஆடமுடியாத அவரது இயலாமையை வெளிப்படுத்தியது. கடந்த சீசனின் மட்டமான ஆட்டத்தால் கடும் விமர்சனங்களுக்கு உள்ளான அவரை சிஎஸ்கே அணி கழட்டிவிட்டுள்ள நிலையில், அடுத்த சீசனில் அவரை எந்த அணியும் அண்டாது.
2. முரளி விஜய்
முரளி விஜயும் சிஎஸ்கே வீரர் தான். அதற்கு முந்தைய சீசன்களில் முரளி விஜய்க்கு சிஎஸ்கே அணியின் ஆடும் லெவனில் இடம் கிடைக்காத போதிலும், சுரேஷ் ரெய்னா ஆடாததால், கடந்த சீசனில் அவருக்கு தொடக்க வீரராக இறங்கும் வாய்ப்பு கிடைத்தது. சீசனின் தொடக்கத்தில் முரளி விஜய் தான் முதன்மை தொடக்க வீரராக முன்னுரிமை கொடுத்து இறக்கப்பட்டார். ஆனால் அவர் பேட்டிங் ஆடிய விதமும், அவுட்டே இல்லாததற்கு மறுமுனையில் நிற்கும் வீரரை கலந்தாலோசிக்காமல் கூட ரிவியூ எடுக்காமல் நடையை கட்டிய விதமும் அவரது தன்னம்பிக்கை மிகவும் கீழாக இருந்ததை காட்டியது. அதன்விளைவாக ஒருசில போட்டிகளுக்கு பின்னர் ஆடும் லெவனில் இடம் கொடுக்காமல் கழட்டிவிடப்பட்ட முரளி விஜய், 14வது சீசனுக்கு முன்பாக சிஎஸ்கே அணியிலிருந்தே கழட்டிவிடப்பட்டார். இவரையும் எந்த அணியும் சீண்டாது.
3. கருண் நாயர்
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இருந்தும் கூட, அணியின் ஆடும் லெவனில் நிரந்தர இடம் கிடைக்காமல் தவித்துவந்த கருண் நாயர், கிடைக்கும் ஒருசில வாய்ப்புகளிலும் சொதப்பி வந்தார். கடந்த சீசனில் வெறும் 4 போட்டிகளில் மட்டுமே ஆட வாய்ப்பு கிடைத்த கருண் நாயர், அதிலும் ஒழுங்காக ஆடாமல் வெறும் 16 ரன்கள் மட்டுமே அடித்தார். நடந்துவரும் சையத் முஷ்டாக் அலி தொடரிலும் கடைசி 10 இன்னிங்ஸ்களில் ஒரு அரைசதம் அடிக்கவில்லை; அவரது அதிகபட்ச ஸ்கோரே 27. எனவே 14வது சீசனுக்கான ஏலத்தில் எந்த அணியாலும் அவர் எடுக்கப்பட வாய்ப்பேயில்லை.