- Home
- Spiritual
- Diwali 2025: லட்சுமி தேவி வீட்டிற்குள் வர, தீபாவளிக்கு முன்பு இந்த 5 பொருட்களை தூக்கி எறிந்து விடுங்கள்.!
Diwali 2025: லட்சுமி தேவி வீட்டிற்குள் வர, தீபாவளிக்கு முன்பு இந்த 5 பொருட்களை தூக்கி எறிந்து விடுங்கள்.!
Throw these things before diwali: இந்து கலாச்சாரத்தில் மிகவும் புனிதமான பண்டிகையாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தீபாவளி அக்டோபர் 20 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் வீட்டில் செய்ய வேண்டிய சில விஷயங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

தீபாவளிக்கு முன் வீட்டிலிருந்து அகற்ற வேண்டியவை
தீபாவளி பண்டிகையானது அனைவரின் வாழ்க்கையிலும் ஒளியை கொண்டு வரும் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. உலகமெங்கும் வாழும் இந்தியர்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இந்த பண்டிகையை கொண்டாடுகின்றனர். இந்த பண்டிகையின் போது லட்சுமிதேவி நமது வீட்டிற்குள் நுழைவதாக நம்பப்படுகிறது. லட்சுமி தேவி வீட்டில் வருவதற்கு, நம் வீட்டிலிருந்து சில பொருட்களை அகற்ற வேண்டும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அந்த பொருட்கள் என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
உடைந்த கண்ணாடிப் பொருட்கள்
வாஸ்து சாஸ்திரத்தின் படி உடைந்த கண்ணாடிப் பொருட்களை வீட்டில் வைத்திருப்பது அசுபமானதாக கருதப்படுகிறது. உடைந்த கண்ணாடி பொருட்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றல்களை அதிகரிக்கும். மேலும் குடும்ப உறவுகளில் விரிசல்கள், நிதி சார்ந்த பிரச்சனைகள், உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. எனவே வீட்டில் முகம் பார்க்கும் கண்ணாடியோ அல்லது உடைந்த கண்ணாடி பொருட்களோ இருந்தால் அதை முதலில் தூக்கி எறியுங்கள். இதை செய்வதன் மூலம் லட்சுமி தேவி நம் வீட்டிற்குள் நுழைவார் என்று நம்பப்படுகிறது.
பழைய செருப்புகள் மற்றும் துணிகள்
வீட்டில் பழைய அல்லது தேய்ந்து போன செருப்புகள் இருந்தால் தீபாவளிக்கு முன்னர் அவற்றை அகற்றி விட வேண்டும். பழைய செருப்புகள் மட்டுமல்ல, கிழிந்து போன துணிகள் மற்றும் பழைய துணிகளையும் வீட்டில் வைக்கக் கூடாது. இவை வீட்டில் துரதிஷ்டத்தை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும் இந்த பொருட்களை வீட்டில் அடுக்கி வைத்திருப்பது லட்சுமி தேவியை கோபப்படுத்தும் செயல்களாக கருதப்படுகிறது. லட்சுமி தேவியின் கோபத்திற்கு ஆளாகாமல் இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் தேய்ந்து போன பழைய செருப்புகள் மற்றும் கிழிந்து போன துணிகளை வீட்டிலிருந்து அகற்றி விடுங்கள்.
உடைந்த அல்லது நின்று போன கடிகாரங்கள்
நின்று போன அல்லது உடைந்த கடிகாரங்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கிறது. இது தொழில் சார்ந்த பிரச்சினைகளையும், நிதி சார்ந்த சிக்கல்களையும் ஏற்படுத்துகிறது. உடைந்து போன கடிகாரங்கள் அல்லது நின்று போன கடிகாரங்கள் உங்கள் வீட்டில் இருந்தால் அவை உங்கள் தொழில் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கலாம். மேலும் லட்சுமி தேவியின் அருள் கிடைக்காமல் போகலாம். எனவே தீபாவளிக்கு முன்பாக இது இந்த பொருட்களை அகற்றி விட வேண்டும் அல்லது கடிகாரத்தை சரி செய்து விட வேண்டும்.
உடைந்த கடவுள் சிலைகள்
பூஜை அறையில் உடைந்த கடவுள் சிலைகள் இருந்தால் அதை வீட்டில் வைக்க வேண்டாம். மேலும் வீட்டில் பெரிய கடவுள் சிலைகளை வைத்திருப்பதும் அசுபமாக கருதப்படுகிறது. சிலைகளுக்குப் பதிலாக வீட்டில் புகைப்படங்களை வைத்திருப்பது நல்லது. உடைந்த அல்லது சேதமடைந்த புகைப்படங்களாக இருந்தாலோ, சிதலமடைந்த சிலைகள் இருந்தாலோ அவற்றை நீர் நிலைகளுக்குச் சென்று தீப ஆராதனை காட்டி அவற்றை நீர் நிலைகளில் விட்டு விடுங்கள் அல்லது கோவில்களில் இந்த சிலைகளை வைத்து விடுங்கள்.
பிற பொருட்கள்
சமையலறையில் உள்ள காலாவதியான மளிகைப் பொருட்கள், மசாலாப் பொருட்கள், மருந்துப் பொருட்களை அகற்றி விடுங்கள். உடைந்த பைகள், பயன்படுத்தப்படாத துணிகள், உடைந்த மரச்சாமான்கள், பயன்படுத்தாத எலக்ட்ரானிக் பொருட்கள், உடைந்த அலங்காரப் பொருட்கள், பழைய ஆவணங்கள், பேப்பர்கள், பத்திரிகைகள், பயன்படாத காகிதங்கள், தேவையற்ற ரசீதுகள், காய்ந்து போன மலர்கள், உடைந்த விளக்குகள் போன்ற அனைத்தையும் வீட்டில் இருந்து அகற்றி விடுங்கள். தீபாவளி என்பது ஒளி, மகிழ்ச்சி மற்றும் செழிப்பின் பண்டிகை. இந்த பண்டிகையை முழு உற்சாகத்துடன் கொண்டாட, வீட்டை சுத்தமாகவும், ஒளிமயமாகவும் மாற்றுவது அவசியம்.
வீட்டை சுத்தம் செய்தல், அலங்கரித்தல், பூஜை அறைகளை தயார் செய்தல், தேவையற்றப் பொருட்களை அகற்றுதல், காலாவதியான பொருட்கள், உடைந்த பொருட்களை அகற்றுவது நேர்மறை ஆற்றல்களை பரப்ப உதவும். இத்தகைய செயல்களை செய்வதன் மூலம் தீபாவளி தினத்தன்று லட்சுமிதேவி உங்கள் வீட்டில் நிரந்தரமாக வாசம் செய்வாள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)