- Home
- Politics
- என்.டி.ஏ கூட்டணி என்னிடம் தேர்தல் வியூகம் குறித்து விவாதிக்காதது ஏன்? அண்ணாமலை ஆவேசம்.. கமலாலயத்தில் பஞ்சாயத்து
என்.டி.ஏ கூட்டணி என்னிடம் தேர்தல் வியூகம் குறித்து விவாதிக்காதது ஏன்? அண்ணாமலை ஆவேசம்.. கமலாலயத்தில் பஞ்சாயத்து
வியூகம் என்ன என்று கூறாமல் என்னை தேர்தல் பணியாற்றுமாறு கூறினால் எப்படி பணியாற்ற முடியும்? கமலாலயத்தில் உள்ள கம்ப்யூட்டரில் டைப் செய்து பிரின்டரில் பிரிண்ட்டு எடுத்து கொடுத்தால் மட்டும் போதுமா?

தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் பணிகளில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு சிங்காநல்லூர், மதுரை தெற்கு, விருகம்பாக்கம், காரைக்குடி, ஸ்ரீவைகுண்டம், பத்மநாபபுரம் என 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. தேர்தல் சுற்றுப்பயண பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். தனது தந்தையின் உடல்நிலை சரியில்லாததால், அவரை கவனித்துக் கொள்ள வேண்டியிருப்பதாகவும், அடிக்கடி பயணிக்க முடியாத நிலை இருப்பதாகவும் அவர் இதற்கு விளக்கமளித்துள்ளார். இருப்பினும், கட்சி தரும் எந்தப் பணியையும் ஏற்கத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
இந்த விலகல் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக மத்திய தலைமை அண்ணாமலையை ஒதுக்கி வைக்கும் முயற்சியாக இதை சிலர் பார்க்கிறார்கள். அதிமுகவுடனான கூட்டணி மீண்டும் உறுதியான நிலையில், அண்ணாமலையின் அதிரடி பாணி கூட்டணிக்கு பாதகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவருக்கு வழங்கப்பட்ட வெறும் 6 தொகுதிகள் மட்டுமே என்பது ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது. சிலர் இதை அண்ணாமலையின் டெல்லியின் கவனத்தை ஈர்க்கும் உத்தியாகவும் கூறுகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் அண்ணாமலையை சமாதானப்படுத்த தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், கேசவவிநாயகம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
அப்போது அவர்களிடம் அண்ணாமலை, ‘‘சட்டமன்ற தேர்தல் பணிகளில் இருந்து அண்ணாமலை விலகியிருப்பதாக எழுந்த புகார் தொடர்பாக ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் விளக்கம் கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு விளக்கமளித்த அண்ணாமலை, ‘‘சட்டமன்ற தேர்தலில் என்.டி.ஏ கூட்டணி வெற்றி பெறுவதற்கான வியூகம் தொடர்பாக என்னுடன் யாரும் விவாதிக்கவில்லை. முதலில் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க-வை வீழ்த்த என்டிஏவிடம் என்ன வியூகம் உள்ளது? வியூகம் பற்றி விவாதிக்காமல் நான் எப்படி களத்திற்கு சென்று அரசியல் செய்ய முடியும்?
வியூகம் என்ன என்று கூறாமல் என்னை தேர்தல் பணியாற்றுமாறு கூறினால் எப்படி பணியாற்ற முடியும்? கமலாலயத்தில் உள்ள கம்ப்யூட்டரில் டைப் செய்து பிரின்டரில் பிரிண்ட்டு எடுத்து கொடுத்தால் மட்டும் போதுமா? எந்த வியூகத்தின் அடிப்படையில் 6 தொகுதிகளுக்கு என்னை பொறுப்பாளர்களாக நியமித்தனர்? பத்மநாபபுரம் மற்றும் மதுரை தெற்கில் என்னை பொறுப்பாளராக நியமித்ததற்கு என்ன வியூகம் காரணம்? வியூகத்தை விளக்கி கூறினால் நான் ஒரு தொகுதியில் கூட பொறுப்பாளராக பணியாற்ற தயார். வியூகத்தை கூறாமல் நான் சொல்வதை கேட்க வேண்டும் என்கிற தொனியில் என்னை கட்சி அணுகுவது நியாயமா?
தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு தொகுதியை கூறி என்னை நிற்குமாறு கூறினால் என்னால் எப்படி வெல்ல முடியும்? வெற்றிக்கான வியூகத்தை கூறினால் பாஜக மற்றும் என்டிஏ வெற்றிக்காக எந்த பணி கொடுத்தாலும் செய்யத் தயார்’’ என அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.