- Home
- Politics
- நாங்க அண்ணன் தம்பி... யாரும் சிண்டு முடிச்சு விடாதீங்க..! ரூட்டை மாற்றிய மாணிக்கம் தாகூர்..!
நாங்க அண்ணன் தம்பி... யாரும் சிண்டு முடிச்சு விடாதீங்க..! ரூட்டை மாற்றிய மாணிக்கம் தாகூர்..!
நாங்களெல்லாம் ஒற்றுமையாக இருக்கிறோம். காங்கிரஸ் கட்சியில் ராகுலின் வழிகாட்டுதலின்படி மல்லிகார்ஜூனா கார்கே தலைமையிலான காங்கிரஸ் கட்சியை பலமான கட்சியாக மாற்றுவதற்காக உழைத்து வருகிறோம்.

திருப்பி அடிப்போம்
மாணிக்கம் தாகூர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாக உள்ளது. இது திமுக-காங்கிரஸ் கூட்டணியில் ஏற்பட்டுள்ள பதற்றத்தால் எழுந்துள்ளது. விருதுநகர் எம்.பி., மாணிக்கம் தாகூர் சமீப காலமாக திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். "திமுகவின் தவறுகளுக்குப் பழியை காங்கிரஸ் சுமந்தது. மரியாதை கொடுக்காவிட்டால் திருப்பி அடிப்போம். எம்பி, எம்எல்ஏ பதவி மண்ணாங்கட்டி பதவி" என அதிரடி கருத்துகளை தெரிவித்து வருகிறார்.
செல்வப்பெருந்தகை எச்சரிக்கை
இதனால், திமுக தலைமை கோபமடைந்து, கூட்டணி நீடிக்க வேண்டுமானால் மாணிக்கம் தாகூர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் மேலிடத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இல்லையெனில் "ஒட்டுமில்லை, உறவுமில்லை" என்ற நிலைக்கு செல்லலாம் என அச்சுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று பெங்களூருவில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து புகார் அளித்தார். மாணிக்கம் தாகூர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. "கூட்டணி விவகாரங்களை பொதுவெளியில் பேசக்கூடாது. அகில இந்திய காங்கிரஸ் வழிகாட்டுதலுக்கு முரணாக நடப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று செல்வப்பெருந்தகை எச்சரிக்கை விடுத்து இருந்தார்.
அச்சம் இல்லை... அச்சம் இல்லை...
இந்நிலையில் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தளப்பதிவில் "அச்சம் இல்லை அச்சம் இல்லை... அச்சமென்ப தில்லையே" என்ற பாரதியார் பாடல் வரியை பதிவிட்டுள்ளார். இது செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் மேலிடத்திற்கு பதிலடியாகவோ அல்லது தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவோ பார்க்கப்படுகிறது.
அல்ற சில்ற ஐடி விங்
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மாணிக்கம் தாகூர், ‘‘என் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பத்திரிகையாளர்கள் பெரிதுபடுத்திக் கொண்டு இருக்கிறார்கள். அண்ணனுக்கும், தம்பிக்குமான பிரச்சினை இது. நாங்களெல்லாம் ஒற்றுமையாக இருக்கிறோம். காங்கிரஸ் கட்சியில் ராகுலின் வழிகாட்டுதலின்படி மல்லிகார்ஜூனா கார்கே தலைமையிலான காங்கிரஸ் கட்சியை பலமான கட்சியாக மாற்றுவதற்காக உழைத்து வருகிறோம். இதில் நீங்கள் சிண்டு முடிந்து விடாமல் இருக்க வேண்டும். திமுக ஆட்சியில் பங்கு கேட்பது குறித்து ராகுல் காந்தியிடம் நீங்கள் தான் கேட்க வேண்டும்.
நான் பதவியை விட்டு ராஜினாமா செய்து விட்டதாக திமுக ஐடிவிங் போலியான தகவல் பரப்புகிறது. அல்ற சில்ற ஐடி விங் பற்றி பெரிதாக பேச வேண்டாம். அவர்கள் கற்பனைக்கு பாவம் எல்லையே இருக்கிறார்கள்’’ எனத் தெரிவித்துள்ளார்.
