வாக்குறுதி அளித்து 2 வருஷம் ஆச்சு.. மகளிர் உரிமைத் தொகை என்னாச்சு? திட்டத்தை நிறைவேற்ற முடியாமல் திணறும் திமுக
மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என திமுக வாக்குறுதி அளித்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் அந்த திட்டம் இதுவரை செயல்படுத்தப்படவில்லை.
மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்றதன் மூலம் தமிழகத்தில் ஆட்சியமைத்தது. திமுக ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆக உள்ளது. இந்த இரண்டு ஆண்டுகளில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஸ்டாலின் தலைமையிலான அரசு செய்திருந்தாலும், தேர்தல் பிரச்சாரத்தின் போது சொன்ன பல்வேறு வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன.
அதில் ஒன்று தான் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம். இரண்டு ஆண்டுகள் ஆகியும் இந்த திட்டம் என்ன ஆனது என்று எதிர்கட்சிகள் கேட்காத நாள் இல்லை. அப்படி இருந்தும் இதோ தருகிறோம்... அதோ தருகிறோம் என வாய்ச்சொல்லால் மட்டும் பதிலளிக்கும் திமுகவினர் அதற்கான அறிவிப்பை இன்றுவரை வெளியிடவில்லை.
இதையும் படியுங்கள்...ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் யார் போட்டி? ஜி.கே.வாசன் பரபரப்பு தகவல்..!
இந்த திட்டம் நடைமுறைக்கு சாத்தியமில்லை என தெரிந்தும் இதனை செயல்படுத்துவோம் என பொய்யான வாக்குறுதியை கொடுத்து திமுகவினர் மக்களை ஏமாற்றி வருவதாக எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தன. சில நாட்களாக இந்த உரிமைத் தொகை பற்றிய பேச்சுக்கள் எல்லாம் அடங்கி இருந்த நிலையில், தற்போது மீண்டும் கிளம்பி உள்ளன.
இதற்கு காரணம் பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசாக வழங்கி இருந்தது. இதனை வழங்கியதோடு மட்டுமில்லாமல் ஊர் ஊராக போஸ்டர் ஒட்டி அதனை விளம்பரப்படுத்தியும் வருகின்றனர். அதில் திமுக ஆட்சிக்கு வந்தபின் படைத்த சாதனைகள் என லிஸ்ட் போட்டு சிலவற்றை குறிப்பிட்டுள்ளனர்.
திமுகவினர் ஒட்டியுள்ள இந்த போஸ்டரை பார்த்து கொந்தளித்த இணையவாசிகள் இதனை டுவிட்டரில் பகிர்ந்து, ரூ.1000 பொங்கல் பரிசாக கொடுத்தால் மட்டும் போதாது பெண்களுக்கான உரிமைத் தொகை ரூ.1000 எப்போ கொடுப்பீங்க” என கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த ஆண்டு பட்ஜெட்டிலாவது இதுகுறித்த அறிவிப்பு வெளியாகுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படியுங்கள்... பாமக மாநில துணை தலைவர் என கூறி பொதுமக்களிடம் பணம் பறித்த நபர்..! அதிரடி நடவடிக்கை எடுத்த ராமதாஸ்