இந்த ஓட்டக்காரத்தேவர் மகன் பேச்சிமுத்து யாரென்று தெரிகிறதா..? கேள்விக்குறி போஸில் நின்று மாஸான அரசியல்வாதி..!
இந்திய வரலாற்றில் இரண்டு டீக்கடைக்காரர்களுக்கு முக்கிய இடமுண்டு. ஒருவர் இந்திய பிரதமர் மோடி, மற்றவர் தமிழக முதல்வராக இரண்டு முறை பதவி வகித்த ஓ.பன்னீர் செல்வம்.
எம்ஜிஆர், என்டிஆர் வரிசையில் ஓபிஎஸ் என்ற மூன்றெழுத்தும் அதிகம் உச்சரிக்கப்பட்ட எழுத்துக்கள். ஓ.பன்னீர்செல்வம் 1951ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பிறந்தார். இவரது அப்பா ஓட்டக்காரத்தேவர். அம்மா பழனியம்மாள். ஓ.பன்னீர்செல்வம் உள்பட ஐந்து சகோதரர்கள், நான்கு சகோதரிகள். ஓட்டக்காரத்தேவருக்கு வட்டிக்கு பணம் கொடுப்பது தான் தொழில். பன்னீர்செல்வத்திற்கு அவரது அப்பா தனது குல தெய்வமான பேச்சியம்மன் பெயரை நினைவில் கொண்டு ‘பேச்சிமுத்து' என பெயரிட்டார். பின்னர் பன்னீர்செல்வம் என பெயர் மாற்றப்பட்டது.
பள்ளிப்படிப்பை பெரியகுளத்தில் படித்த பன்னீர், உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரியில் பி.ஏ வரலாறு படித்தார். இவரது மனைவி பெயர் விஜயலட்சுமி. இவர்களுக்கு கவிதாபானு என்ற மகளும் ரவீந்திரநாத் குமார், ஜெயபிரதீப் என்ற மகன்களும் உள்ளனர். பெரியகுளம் அருகே கள்ளிப்பட்டியில் சிறிதளவில் வயல், தோட்டம் தவிர சொல்லிக்கொள்ளும் வகையில் வசதிகள் இல்லை. கல்லூரியில் படிக்கும்போதே அவரது அப்பாவுக்கு துணையாக ஃபைனாஸ் கொடுத்து வாங்கும் வேளையிலும் ஈடுபட்டார். முதலில் பெரியகுளம் மார்க்கெட்டில் வட்டிக்கு கொடுத்து வாங்கிய அவரது குடும்பம், அடுத்து லாரிகளுக்கு ஃபைனான்ஸ் கொடுக்கும் தொழிலிலும் கால் பதித்தது.
பி.ஏ.வரை படித்துள்ள ஓ.பன்னீர் செல்வம் பிழைப்பிற்காக பால் பண்ணை நடத்தினார். பின்னர், தனது நண்பருடன் சேர்ந்து பெரியகுளத்தில் டீக்கடை ஆரம்பித்தார். இந்தக்கடையே இவருக்கு வாழ்வாதாரமாக இருந்தது. அதிமுகவில் இருந்தபடி, அவ்வப்போது கட்சிக்கூட்டங்களுக்குப் போய் வந்து கொண்டிருந்தார். 1987ல் எம்ஜிஆர் இறந்தபிறகு, ஜெயலலிதா, ஜானகி என அதிமுக இரண்டானது. ஜானகி அணியில் புகழோடு இருந்த கம்பம் செல்வேந்திரன் புண்ணியத்தில் பெரியகுளம் ஜானகி அணிக்கு ஓ.பி.எஸ் நகர செயலாளரானார். கம்பம் செல்வேந்திரனிடமும் ஜெயலலிதாவிடம் நிற்பது மாதிரி கேள்விக்குறி போஸில் தான் நிற்பாராம் ஓபிஎஸ்.
1989ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் சிவாஜி கட்சியான தமிழக முன்னேற்ற முன்னணி சார்பில் போட்டியிட்ட வேட்பாளருக்கு ஆதரவாக பணிபுரிந்தார். 1991ல் அதிமுக ஒருங்கிணைந்தது. இதையடுத்து முதன்முதலில் பெரியகுளம் நகர கூட்டுறவு வங்கியின் இயக்குநரானார். அங்கு தான் முதன்முதலில் அதிகாரத்தை சுவைத்தார் ஓபிஎஸ். தேர்தலில் வெற்றி 1996ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக பெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அக்காலகட்டத்தில் பெரியகுளம் அதிமுக நகர செயலாளராக இருந்த ஓபிஎஸ்சுக்கு பெரியகுளம் நகர்மன்றத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட சீட் கிடைக்கவே தேர்தலில் போட்டியிட்டு வென்றார்.
இவர் பெரியகுளம் நகர்மன்றத் தலைவராக இருந்தபோது, தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தை பிரித்து தேனியை தலைநகராக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கினார். தேனிக்குப் பதில் பெரியகுளத்தை தலைநகராக அறிவிக்கும்படி ஓபிஎஸ் போராட்டங்கள் நடத்தினார். 1999ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசாக அறிவித்துக்கொண்ட டி.டி.வி.தினகரன் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டார். தேனியில் தேர்தல் அலுவலகம் வைத்திருந்த டி.டி.வி.தினகரன், எம்.பியான பிறகு ஆண்டுக்கு ஒரு தொகுதியில் குடியிருப்பது என முடிவெடுத்தார். இதன்படி, 2000ம் ஆண்டில் பெரியகுளத்தில் உள்ள ஓ.பி.எஸ்.,சின் தம்பி ஓ.ராஜாவுக்கு சொந்தமான வீட்டிற்கு குடியேறினார்.
இதுவே ஓபிஎஸ்சின் வளர்ச்சிக்கு துணையாக அமைந்தது. இந்த நெருக்கமே, 2001ம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் ஓபிஎஸ் போட்டியிட வாய்ப்பு கிடைக்க காரணமாக அமைந்தது. தினகரனுக்கு முன் ஓ.பி.எஸ் அப்போதும் இப்போதும் உட்காரக் கூட மாட்டார். அதே குனிவு, பணிவு தான். அமைச்சரான ஓபிஎஸ் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற உடன் தினகரன்- சசிகலாவின் ஆசியால் வருவாய்த்துறை அமைச்சராக 2001ம் ஆண்டு மே 19 முதல் 2002 ஆம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி வரை பதவி வகித்தார். அமைச்சராக இருந்து கொண்டு தங்களுக்குக் காட்டிய பணிவால் சசிகலா குடும்பத்தினரை கவர்ந்தார்.
தேடி வந்த முதல்வர் நாற்காலி 2001ம் ஆண்டு டான்சி வழக்கில் ஜெயலலிதா பதவி இழந்த போது சசிகலாவால் முதல்வர் நாற்காலியில் அமரவைக்கப்பட்டார். ஜெயலலிதா விடுதலை ஆன பின் 2002ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி முதல்வர் பதவியில் இருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை அமைச்சராக 2002 மார்ச் 2 முதல் 2006 மே வரை பதவி வகித்தார். 2004ல் நடந்த எம்.பி தேர்தலில் டிடிவி தினகரனை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ஜே.எம்.ஆரூண் போட்டியிட்டார். தேர்தலில் டி.டி.வி.தினகரன் தோல்வியடைந்து கட்டிய வேட்டியோடு பெரியகுளத்தைவிட்டு மன்னார்குடிக்கு திரும்பினார். பெரியகுளத்தில் அமைதியாக இருந்த ஓபிஎஸ்சின் ரத்த சொந்தங்கள், வாரிசுகள் டி.டி.வி.தினகரன் சென்ற பிறகு, அரசியல், கான்ட்ராக்ட்களில் தனி ஆவர்த்தனம் செய்யத் துவங்கினர்.
OPS
OPS
OPS
அதிமுக பொருளாளர் இதற்கிடையே ஜெயலலிதாவின் குட் புக்கில் நிரந்தர இடம் பிடித்த ஓ.பி.எஸ்.க்கு அரசியலில் அடுத்தடுத்து லாபம். எந்த டிடிவி தினகரனால் அதிமுக தலைமையிடம் அடையாளம் காட்டப்பட்டாரோ அதே டி.டி.வி.தினகரன் வகித்த அதிமுக பொருளாளர் பதவியை வகித்தார். இன்னும் சொல்லப்போனால் சசிகலா, டி.டி.வி.தினகரன் வகிக்காத முதல்வர், துணை முதல்வர் பதவிகளை வகித்து விட்டார் ஓ.பி.எஸ். சசிகலா முதல்வராக பதவியேற்கக்கூடாது என ஜெயலலிதா நினைவிடத்தில் தியானம் மேற்கொண்ட அதே ஓ.பி.எஸ்., இப்போது சசிகலா தலைமையேற்க இசைவு தெரிவித்து ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்.