- Home
- Politics
- இந்திய அரசுக்கு எதிராக சசிகாந்த் செந்தில் சூழ்ச்சி..? அம்பலமான இலங்கை விசிட்... ஷாக் பின்னணி..!
இந்திய அரசுக்கு எதிராக சசிகாந்த் செந்தில் சூழ்ச்சி..? அம்பலமான இலங்கை விசிட்... ஷாக் பின்னணி..!
இலங்கை இந்திய மீனவர்களுக்கு இடையே சமாதானம் பேச வேண்டிய திமுக, காங்கிரஸ் எம்.பி.,க்கள் அதற்கு மாறாக இலங்கையில் உள்ள தமிழ் மீனவர்களைத் தூண்டிவிட்டு வருவதற்குத்தான் அங்கே சென்றார்களா? இப்படியான பேச்சு ஈழத்தில் உள்ளது.

தமிழகத்திற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆகஸ்ட் 30ம் தேதி முதல் நான்காவது நாளாக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் காங்கிரஸ் எம்.பி., சசிகாந்த் செந்தில்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., அலுவலகம் அருகில் மூன்றாம் நாளாக நேற்றும் உண்ணாவிரதம் இருந்தார். அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து போலீசார் அவரை சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் தன்னிச்சையாக உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளார்.
சசிகாந்த் செந்திலின் செயல்பாடுகள் குறித்து அரசியல் விமர்சகரும், சமீபத்தில்ம் பாஜகவில் இணைந்தவருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் பல்வேறு சந்தேகங்களை முன் வைத்துள்ளார். இது குறித்து அவர், ‘‘ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் என்பவர் காங்கிரஸில் சேர்ந்தார். கூட்டணியில் டெல்லி தலைமை சிபாரிசின் பேரில் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினராக ஆனார்.
இவர் தர்மசாலாவில் பிரச்சனையைக் கிளப்பினார். அது வேறொரு திசை நோக்கிப் போகவே, இப்போது மத்திய அரசுகல்வி நிதியை ஒதுக்கவில்லை என்று உண்ணாவிரதம் இருந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். அவருக்கு சிகிச்சை நல்லவிதமாக நடக்கட்டும்.
நான் இன்னொன்றையும் இங்கு சொல்ல வேண்டும். கடந்த 2025 மே மாதம் 18 தேதிக்கு முன்னோ, பின்னோ இலங்கையில் உள்ள ஈழப் பகுதிக்கு இந்த சசிகாந்த் செந்தில் சென்றாராம். அங்குள்ள தமிழ் மீனவர்களை இந்திய அரசுக்கு எதிராகவும், இந்திய மீனவர்களுக்கு எதிராகவும் திசை திருப்பி இரு நாடுகளுக்கு இடையே பிரச்சனை வரவேண்டும் என்று ஏதாவது பேசி தூண்டிவிட்டு வந்தாரா என்ற விவகாரம் இருக்கிறது? அதற்கடுத்து திமுக ராஜ்யசபா எம்பிக்கள் இதே மாதிரி அங்கு சென்று பேசிவிட்டு வந்ததாகவும் தகவல் இருக்கிறது. ஒரு அடிப்படையும் இல்லாமல், பிரச்சனையைத் துவக்குங்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று உத்தரவாதம் சொல்லிவிட்டு வருவதற்கு இவர்கள் என்ன சர்வதேச வழக்கறிஞர்களா ?
இலங்கை இந்திய மீனவர்களுக்கு இடையே சமாதானம் பேச வேண்டிய திமுக, காங்கிரஸ் எம்.பி.,க்கள் அதற்கு மாறாக இலங்கையில் உள்ள தமிழ் மீனவர்களைத் தூண்டிவிட்டு வருவதற்குத்தான் அங்கே சென்றார்களா? இப்படியான பேச்சு ஈழத்தில் உள்ளது. இந்த பிரச்சனை கடந்த மே மாதத்தில் இருந்து நடந்து வந்து கொண்டிருக்கிறது. இப்படிப்பட்டவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தால் இரு நாட்டு மீனவர்கள் இடையேயான உறவு என்னவாகும்? எந்த முறையான அணுகுமுறையும் இல்லாமல் இப்படித் தூண்டுபவர்கள் அதன் விளைவுகளை பற்றிச் சிந்திப்பார்களா? இப்படியெல்லாம் நடந்து கொண்டிருக்கிறதா? என்பதையும் இது உண்மைதானா? என்பதையும் தீர விசாரிக்க வேண்டும். குறிப்பிட்ட தேதிகளில் இவர்கள் அங்கே இருந்தார்கள் என்பது உண்மையா?’’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
சசிகாந்த் செந்தில் குமார் தான் உண்ணாவிரதம் இருக்கப்போவதை சக எம்.பி.,க்கள், காங்கிரஸ் டெல்லி தலைமை, மாநிலத் தலைமை என யாரிடமும் தகவல் கூறவில்லை என்கிறார்கள். வரும் 7ம் தேதி ஓட்டு திருட்டு தொடர்பாக மத்திய அரசை கண்டித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில், திருநெல்வேலியில் காங்கிரஸ் மாநாடு நடக்க உள்ளது. அதன் முக்கியத்துவத்தை குறைக்கும் வகையில், சசிகாந்த் செந்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கி உள்ளாரா? என தமிழக காங்கிரஸ் கோஷ்டி தலைவர்கள், கட்சி தலைமையிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘‘ஓட்டு திருட்டு தொடர்பான விழிப்புணர்வை மடை மாற்றும் செயலாக சசிகாந்த் செந்தில் உண்ணாவிரதப் போராட்டம் உள்ளது. அவரது நோக்கம் சரியானது தான். தற்போது ஓட்டு திருட்டு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்பட்டு வரும் சூழலில், அவர் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்த வேண்டும்' என அதிருப்தி தெரிவித்துள்ளார்.