திருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது..! பரவசத்தோடு தரிசனம் செய்த பக்தர்கள்..!
கார்த்திகை திருநாளை முன்னிட்டு இன்று அதிகாலை திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து தற்போது சரியாக மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டதை, பக்தர்கள் பரவசத்துடன் தரிசித்து வருகிறார்கள்.
பஞ்ச பூதங்களில் நெருப்புக்குரிய தலமாக திகழ்வது திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் கோவில்.
இந்த திருத்தலத்தில் கார்த்திகை திருநாள் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் தீபத்திருவிழா கடந்த சில தினங்களுக்கு முன் கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதில் முக்கிய நிகழ்வான பரணி தீபம், ஏற்றும் நிகழ்ச்சி இன்று அதிகாலை வெகு விமர்சையாக நடந்தது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க பரணி தீபம் ஏற்றப்பட்டது.
இந்நிலையில் திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு நடைபெற்றது.
கோயிலுக்குப் பின்புறமுள்ள 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்படுகிறது.
தீபம் எரிய திரியாகப் பயன்படுத்தப்படும் 11 ஆயிரம் மீட்டர் காடா துணி மற்றும் நெய் போன்றவை கோயிலில் நேற்று முன்தினம் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து இன்று மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது. வருடம் தொடரும் லட்ச கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும் இந்த தீப திருநாளில், இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, மற்ற மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக, திருவண்ணாமலையில் வழக்கத்தை விட குறைவான பக்தர்கள் மட்டுமே கலந்து கொண்டு வழிபட்டனர்.