குடியரசுத் தலைவர் முதல் குஷ்பு வரை... இன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட முக்கிய பிரமுகர்கள்...!
மார்ச் 1-ம் தேதி முதல் 60 வயதைக் கடந்தவர்களுக்கும், இணைநோய்கள் கொண்ட 45 வயதைக் கடந்தவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
நாடு முழுவதும் ஜனவரி 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக 3 கோடி முன்களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 1.56 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது மார்ச் 1-ம் தேதி முதல் 60 வயதைக் கடந்தவர்களுக்கும், இணைநோய்கள் கொண்ட 45 வயதைக் கடந்தவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
பிரதமர் மோடி, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, உள்துறை அமைச்சர் அமித் ஷாவைத் தொடர்ந்து நாடு முழுவதும் அரசியல் கட்சியினர், திரையுலகினர் என முக்கிய பிரமுகர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டெல்லியிலுள்ள ராணுவ மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக் கொண்டார்.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று கொரோனா தடுப்பூசின் முதல் டோஸை எடுத்துக் கொண்டார்.
பாஜக நிர்வாகியும், பிரபல நடிகையுமான குஷ்பு சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக்கொண்டார். என் குடும்பத்தினர், தினமும் சந்திக்கும் ஆயிரக்கணக்கள் மீது உள்ள அக்கறையால் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். கொரோனா இல்லா தேசமாக உருவாகிட நாம் அனைவரும் நமது சுற்று வரும் போது தவறாமல் போட்டுக் கொள்வோம் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவைக்கு அருகில் உள்ள இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமியும், எம்.பி.வைத்தியலிங்கமும் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் தன்னுடைய தாய், தந்தையருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.
கமல்ஹாசனின் சகோதரரும், நடிகருமான சாருஹாசன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் டெல்லியின் ஓக்லா பகுதியில் உள்ள ஃபோர்டிஸ் எஸ்கார்ட்ஸில் உள்ள மருத்துவமனையில் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.