- Home
- Lifestyle
- நிறத்துக்காக தர்பூசணியில் போடப்படும் ஊசி.! விஷமாக மாறும் பழங்கள்? கலப்பட தர்பூசணியை வீட்டிலேயே கண்டுபிடிப்பது எப்படி?
நிறத்துக்காக தர்பூசணியில் போடப்படும் ஊசி.! விஷமாக மாறும் பழங்கள்? கலப்பட தர்பூசணியை வீட்டிலேயே கண்டுபிடிப்பது எப்படி?
How to Detect Adulterated Watermelons at Home : தர்பூசணி விற்பனை சூடு பிடித்திருக்கும் நிலையில் கலப்பட தர்பூசணிகளை எப்படி கண்டுபிடிக்கலாம் என்பது குறித்த எளிய வழிகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

How to Detect Adulterated Watermelons at Home
கோடைகாலம் தொடங்கி விட்டாலே தர்பூசணி விற்பனை சூடுபிடிக்கும். அதிக லாபத்திற்காக தர்பூசணிக்கு சாயம் ஏற்றுவது, இனிப்பு சுவையை அதிகரிக்க ஊசிகளை பயன்படுத்துவது என்று அதிர்ச்சி அளிக்கும் விஷயங்கள் நடந்து வருகிறது. மேலும் மும்பையில் தர்பூசணி சாப்பிட்ட ஒரு குடும்பமே பலியாகி உள்ள சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. இந்த பதிவில் கலப்பட தர்பூசணியை எப்படி கண்டறிவது? அதில் உள்ள ஆபத்துகள் என்ன? என்பது குறித்து விரிவான தகவல்களைப் பார்க்கலாம்.
தர்பூசணியில் கலக்கப்படும் ரசாயனங்கள்
தர்பூசணி உட்புறம் சிகப்பாகவும், அதிக இனிப்பாகவும் இருப்பதற்காக இரண்டு வேதியல் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. எரித்ரோசின் எனப்படும் சிகப்பு நிறச்சாயம் பழத்தின் உட்புறம் அடர் சிவப்பாக தெரிவதற்காக ஊசி மூலம் ஏற்றப்படுகிறது. பழத்தை சீக்கிரம் பழுக்க வைக்கவும், செயற்கையான இனிப்பை வழங்கவும் கார்பைடு மற்றும் சாக்ரின் பயன்படுத்தப்படுகின்றன. வீட்டிலேயே சில எளிய சோதனைகள் மூலம் தர்பூசணியில் கலப்படம் இருக்கிறதா? இல்லையா? என்பதை நம்மால் எளிதில் கண்டறிய முடியும்.
கலப்பட தர்பூசணியை கண்டுபிடிப்பது எப்படி?
தர்பூசணியை வெட்டிய பிறகு ஒரு சிறிய துண்டு பருத்தி பஞ்சு அல்லது வெள்ளை துணியை எடுத்து அதன் சிகப்பு பகுதியில் மென்மையாக தேய்க்கவும். கலப்படம் இருந்தால் துணியில் அடர் சிகப்பு நிறம் ஒட்டும். இயற்கையானதாக இருந்தால் லேசான இளஞ்சிவப்பு நிறம் அல்லது ஈரப்பதம் மட்டுமே வரும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்துக்கொண்டு அதில் ஒரு துண்டு தர்பூசணியை போடவும். கலப்பட தர்பூசணி என்றால் தண்ணீர் அது சிவப்பு நிறமாக மாறும். இயற்கையானதாக இருந்தால் தண்ணீர் நிறம் மாறாது அல்லது தாமதமாக லேசான மாற்றம் ஏற்படும்.
தர்பூசணி வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை
தர்பூசணியை வாங்கும் பொழுது அதன் மேற்புறத்தில் துளைகள் அல்லது ஊசி போட்ட தழும்புகள் தென்படுகிறதா என்று பாருங்கள். பழத்தைச் சுற்றி இருக்கும் தோல் பகுதிகளில் கரும்புள்ளிகள் அல்லது கசிவு இருந்தால் அது ஊசி போட்டதற்கான அடையாளமாக இருக்கலாம். இயற்கையான தர்பூசணி இனிப்பாக இருக்கும். ஆனால் நாக்கில் ஒரு வித கசப்புத்தன்மை அல்லது இரசாயன வாடை ஏற்பட்டால் சாப்பிடுவதை நிறுத்தி விடுங்கள். சாயம் ஏற்றப்பட்ட பழத்தில் செயற்கையான சுவை தட்டுப்படும். இது போன்ற கலப்பட தர்பூசணிகளை உடனடியாக தூக்கி எறிந்துவிடுங்கள்.
கலப்பட தர்பூசணியால் ஏற்படும் பின்விளைவுகள்
சாயங்கள் மற்றும் ரசாயனங்கள் கலந்த தர்பூசணிகளை நாம் சாப்பிடும் பொழுது அது உடனடியாக நமது ரத்தத்தில் கலந்து பின்வரும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி. உணவு நச்சுத்தன்மை. நீண்ட கால அடிப்படையில் சிறுநீரக பாதிப்புகள் மற்றும் கல்லீரல் சேதாரங்கள். குழந்தைகளுக்கு ஒவ்வாமை மற்றும் சுவாசக் கோளாறுகள். அரிதான நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்படக்கூடும். உணவு பாதுகாப்புத்துறையின் அறிவுறுத்தலின்படி பழம் சாப்பிட்ட பிறகு உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதை சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. கலப்பட தர்பூசணிகள் விற்பது தெரியவந்தால் பாதுகாப்பு துறைக்கு தகவல் கொடுக்க வேண்டியது அவசியம்.
தர்பூசணி எப்படி வாங்க வேண்டும்?
பழம் வாங்கும் பொழுது பழத்தின் அடிப்பகுதி மஞ்சள் நிறத்தில் இருக்கிறதா என்று பாருங்கள். இது பழம் கொடியில் தானாக பழுத்ததைக் குறிக்கும். மிகப் பளபளப்பாக இருக்கும் பழங்களை விட சராசரியான தோற்றம் கொண்ட பழங்களை தேர்ந்தெடுங்கள். பழத்தை வெட்டிய பிறகு பவுடர் போன்ற படிவம் தெரிந்தால் அதை தவிர்ப்பது நல்லது. தர்பூசணியை வெட்டும்போது, அது மிகவும் அடர் சிவப்பு நிறத்தில் இருந்தாலோ அல்லது எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியான நிறத்தில் இருந்தாலோ எச்சரிக்கையாக இருங்கள்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

