1100 ஆண்டு பழமை வாய்ந்த சிவலிங்கம் கண்டுபிடிப்பு..! வியட்நாமே கண்டு வியக்கும் புகைப்படங்கள்!
பழங்காலத்தில் இருந்தே பல தென் கிழக்கு ஆசிய நாடுகள் இந்தியாவோடு, மிகவும் உறுதியான தொடர்பை கொண்டிருந்தது என்பதற்கு ஆதாரமாகத் தற்போது வியட்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
இந்துக்கள் வழிபடும், பல திருத்தளங்கள் வியட்நாமில் குவாங்சங் என்ற பகுதியில் காணப்படுகின்றன. அந்நாட்டில் 1969 ஆம் ஆண்டு நடந்த வெடிகுண்டு தாக்குதலில் சில கோவில்கள் அழிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனை கண்டறிய 4 பேர்கொண்ட இந்தியக் குழு கடந்த 2011 இல் அமைக்கப்பட்டு, இதுகுறித்து ஆராய்ந்து வந்தது.
இந்நிலையில் தற்போது அந்தக் குழு வியட்நாமின் குவாங்சங் என்ற இடத்தில் தற்போது 1100 ஆண்டு பழமையான சிலையைக் கண்டுபிடித்து இருப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்து உள்ளார்.
கி.பி. 4 நூற்றாண்டு அளவில் ஆஸ்ட்ரோனேசிய பகுதியைச் சார்ந்த சாம்ஸ் இனக்குழு மக்கள் மைன் சன் என்ற பகுதியில் பல்வேறு இந்திய கலாச்சாரகளைக் கொண்ட கோவில்களை உருவாக்கியதாக வரலாற்று ஆதாரங்கள் வெளியாகி இருக்கிறது. இந்தியாவிற்கும் வியட்நாம் போன்ற தெற்காசிய நாடுகளுக்கும் இடையே கி.மு காலத்தில் இருந்தே வணிகம் போன்ற தொடர்புகள் இருந்தாலும் கிறிஸ்து பிறப்பிற்கு பிறகு தான் அங்கு பல ராஜ்ஜியங்கள் உருவாக்கப் பட்டதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
வியட்நாம் பகுதியில் இந்திய சாம்ராஜ்ஜியங்கள் உருவாக்கப் பட்ட பின்னர் அதாவது கி.பி. 4 மற்றும் கி.பி. 14 க்கும் இடைப்பட்ட காலத்தில் இத்தகைய கோவில்கள் உருவாக்கப் பட்டு இருக்கலாம் என்று இந்தியத் தொல்லியல் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.
இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் வியட்நாமில் இதுவரை 6 சிவலிங்கங்களை கண்டெடுத்துள்ளனர். ஆனால் இந்த சிவலிங்கம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மொழி, மதம், கலாச்சாரம் போன்ற பல்வேறு தொடர்புகள் மூலம் வியட்நாம் இன்றளவும் இந்தியாவோடு உறுதியான தொடர்பைக் 1000 வருடங்களுக்கு முன்பிருந்தே கொண்டிருந்தது என்பதற்கு இந்த சிவலிங்கமே ஆதாரமாக அமைந்துள்ளது.