SRH vs KXIP போட்டியில் சன்ரைசர்ஸ் வீரர்களிடம் இந்த விஷயத்தை கவனிச்சீங்களா..? ஏன் தெரியுமா..?
கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து ஆடினர்.
ஐபிஎல் 13வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, பேர்ஸ்டோ மற்றும் வார்னரின் அதிரடியான பேட்டிங்கால் 20 ஓவரில் 201 ரன்களை குவித்தது. பேர்ஸ்டோ 55 பந்தில் 97 ரன்களையும் வார்னர் 40 பந்தில் 52 ரன்களையும் குவிக்க, 20 ஓவரில் 201 ரன்களை குவித்து 202 ரன்களை பஞ்சாப்புக்கு இலக்காக நிர்ணயித்தது.
தொடர் தோல்விகளை தழுவிவந்த இந்த இரு அணிகளுமே வெற்றியை எதிர்நோக்கி களமிறங்கிய இந்த போட்டியில், பஞ்சாப்புக்கு கடின இலக்கை நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் அணி.
202 ரன்கள் என்ற கடின இலக்குடன் ஆடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் நிகோலஸ் பூரான் மட்டுமே சிறப்பாக ஆடினார். அதிரடியாக ஆடிய பூரான் 37 பந்தில் 77 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அவரைத்தவிர வேறு யாருமே சரியாக ஆடாததால் 132 ரன்களுக்கே ஆல் அவுட்டாகி 69 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது பஞ்சாப் அணி.
இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து ஆடினர். சாலை விபத்தில் உயிரிழந்த 29 வயதான இளம் ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் நஜீப் தரகாயின் மரணத்திற்கு, இரங்கல் தெரிவிக்கும் விதமாக சன்ரைசர்ஸ் வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து ஆடினர்.
கடந்த வெள்ளிக்கிழமை கார் மோதிய விபத்தில் நஜீப் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை(6ம் தேதி) உயிரிழந்தார்.
இந்நிலையில், ஆஃப்கானிஸ்தானை சேர்ந்த ரஷீத் கான் சன்ரைசர்ஸ் அணியில் நட்சத்திர வீரராக ஜொலித்துவரும் நிலையில், நஜீப் தரகாய் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாகவும் துக்கத்தை அனுசரிக்கும் விதமாகவும், சன்ரைசர்ஸ் வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து ஆட வேண்டும் என்று ரஷீத் கான் கேட்டுக்கொள்ள, அதை ஏற்று சன்ரைசர்ஸ் வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து ஆடினர்.