RCBvsKXIP: ஆர்சிபிக்கு எதிராக அவரோட ரெக்கார்டை பாருங்க; இன்னக்கி மேட்ச்ல அவரு கண்டிப்பா ஆடணும்.! சேவாக் அதிரடி
ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, கிறிஸ் கெய்லை ஆடவைக்க வேண்டும் என்று அந்த அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் சேவாக் வலியுறுத்தியுள்ளார்.
ஐபிஎல் 13வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இந்த சீசனில் ஆடிய முதல் 7 போட்டிகளில் பஞ்சாப் அணி ஒரேயொரு வெற்றியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள நிலையில், இன்றைய போட்டியில் ஆர்சிபியை எதிர்கொள்கிறது பஞ்சாப் அணி.
இந்நிலையில், ஆர்சிபிக்கு எதிரான இன்றைய போட்டியில் பஞ்சாப் அணி கிறிஸ் கெய்லை ஆடவைக்க வேண்டும் என்று சேவாக் வலியுறுத்தியுள்ளார்.
இந்த சீசனில் பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக கேஎல் ராகுலும் மயன்க் அகர்வாலும் இறங்கிவருகின்றனர். இருவரும் மிகச்சிறப்பாக ஆடி இந்த சீசனில் இதுவரை அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிரண்டு இடங்களில் உள்ளனர். ராகுல் 387 ரன்களையும் மயன்க் அகர்வால் 337 ரன்களையும் குவித்துள்ளனர்.
இருவரும் ஓபனிங்கில் நன்றாக செட் ஆகிவிட்டதால், கெய்ல் இந்த சீசனில் இதுவரை ஆடவில்லை. அவருக்கு உடல் உபாதை இருந்ததும் ஒரு காரணம். இந்நிலையில், கெய்ல் முழு உடற்தகுதியுடன் இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுவிட்டது. அதனால் அவரையும் மயன்க் அகர்வாலையும் தொடக்க வீரர்களாக இறக்கிவிட்டு, ராகுல் 3ம் வரிசையில் ஆட வேண்டும் என்று சேவாக் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள சேவாக், கிறிஸ் கெய்ல் முழு உடற்தகுதியுடன் இருக்கிறார். எனவே அவரும் மயன்க் அகர்வாலும் பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக இறங்க வேண்டும். ராகுல் 3ம் வரிசையில் இறங்கலாம். ஆர்சிபிக்கு எதிராக கெய்லின் சராசரி 54; ஸ்டிரைக் ரேட்டும் அபாரமாக இருக்கிறது. எனவே ஆர்சிபிக்கு எதிராக கெய்ல் ஆட வேண்டும் என்று சேவாக் தெரிவித்துள்ளார்.
ஆர்சிபி அணியால் கழட்டிவிடப்பட்ட கெய்லை, 2018 ஐபிஎல் சீசனில் பஞ்சாப் அணியில் எடுத்ததே, அப்போதைய பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளர் சேவாக் தான் என்பது குறிப்பிடத்தக்கது.