ஐபிஎல் 2020: செம பேட்டிங்டா தம்பி.. உன்னை பார்த்தால் எனக்கு அவரு ஞாபகம் வருது..! பூரானுக்கு சச்சின் புகழாரம்
நிகோலஸ் பூரானின் பேட்டிங்கை வெகுவாக புகழ்ந்துள்ளார் சச்சின் டெண்டுல்கர்.
ஐபிஎல் 13வது சீசனின் முதல் பாதி முடிவில் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, அதன்பின்னர் தொடர்ச்சியாக 3 போட்டிகளில் வெற்றி பெற்று, புள்ளி பட்டியலில் ஐந்தாமிடத்திற்கு முன்னேறிவிட்டது.
பிளே ஆஃபிற்கு தகுதிபெறும் வாய்ப்பை தக்கவைத்துள்ளது பஞ்சாப் அணி. டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 165 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பஞ்சாப் அணி, கெய்ல், பூரான் ஆகியோரின் அதிரடியான பேட்டிங்கால் 19வது ஓவரிலேயே இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் பஞ்சாப் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களான கேஎல் ராகுல் மற்றும் மயன்க் அகர்வால் ஆகிய இருவரும் சரியாக ஆடாதபோதும் கூட, கெய்லின் அதிரடி பேட்டிங் மற்றும் நிகோலஸ் பூரானின் பொறுப்பான அதிரடி அரைசதம் ஆகியவற்றால் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.
மயன்க், ராகுல், கெய்ல் ஆகியோர் அவுட்டாகிவிட்டதால், பொறுப்பை தனது தோள்களில் சுமந்த பூரான், அடித்து ஆடி அரைசதமடித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். 28 பந்தில் 53 ரன்களை விளாசி அவர் ஆட்டமிழந்தாலும், அவரது அதிரடியால் பின்னால் வந்த வீரர்கள் பஞ்சாப் அணியை எளிதாக வெற்றி பெற செய்தனர்.
இந்த போட்டியில் நிகோலஸ் பூரானின் பேட்டிங்கை கண்டு வியந்த சச்சின் டெண்டுல்கர், அவர் பேட்டிங் ஆட நிற்பதும், அவரது கால் நகர்வுகளும் ஜேபி.டுமினியை போல இருப்பதாக தெரிவித்திருப்பதுடன், அவரது பேட்டிங்கை பாராட்டவும் செய்துள்ளார்.
ஏற்கனவே, ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக பூரான் செய்த அருமையான ஃபீல்டிங்கை, தன் வாழ்க்கையிலேயே இதுமாதிரி ஒரு சிறந்த ஃபீல்டிங்கை பார்த்ததில்லை என சச்சின் பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. பூரானின் ஃபீல்டிங்கால் கவரப்பட சச்சின், தற்போது அவரது பேட்டிங்காலும் கவரப்பட்டுள்ளார்.