சின்னசாமி நெனப்புலயே தூக்கியடித்து சிக்கிய கோலி.. படிக்கல், டிவில்லியர்ஸின் அரைசதத்தால் SRH-க்கு சவாலான இலக்கு
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தேவ்தத் படிக்கல் மற்றும் டிவில்லியர்ஸின் அரைசதத்தால் ஆர்சிபி அணி 20 ஓவரில் 163 ரன்களை குவித்து 164 என்ற சவலான இலக்கை நிர்ணயித்துள்ளது.
ஐபிஎல் 13வது சீசனின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் ஆர்சிபி அணியும் ஆடிவருகின்றன. துபாயில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் டேவிட் வார்னர், ஆர்சிபி அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.
இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணிக்கு, இளம் தொடக்க வீரரான தேவ்தத் படிக்கல் அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தார். 2வது ஓவரிலேயே அடித்து ஆட தொடங்கிய தேவ்தத் படிக்கல், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பவுலிங்கை அடித்து ஆடி 36 பந்தில் அரைசதம் அடித்தார்.
படிக்கல் அடித்து ஆடியதால் அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய ஃபின்ச், பெரிதாக அடித்து ஆடவில்லை. ஆனாலும் களத்தில் செட்டில் ஆனார். ஐபிஎல்லில் தனது முதல் போட்டியிலேயே அரைசதம் அடித்த படிக்கல், 42 பந்தில் 8 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் அடித்து 11வது ஓவரில் ஆட்டமிழந்தார். அவர் அவுட்டாகும் போது அணியின் ஸ்கோர் 90 ரன்கள். படிக்கல் அவுட்டான அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே ஃபின்ச்சும் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். களத்தில் செட்டில் ஆன ஃபின்ச், படிக்கல் அவுட்டான அடுத்த ஓவரிலேயே ஆட்டமிழந்தது ஆர்சிபி அணிக்கு பின்னடைவுதான்.
ஆனாலும் அதன்பின்னர் கோலியும் டிவில்லியர்ஸும் ஜோடி சேர்ந்ததால், எதிர்பார்ப்பு எகிறியது. ஆனால் 2-3 ஓவர்களில் தொடர்ந்து சிங்கிள் அடித்து ஆடிக்கொண்டிருந்த கோலி, இடது கை இளம் ஃபாஸ்ட் பவுலர் நடராஜனின் பந்தை மிட் விக்கெட் திசையில் தூக்கியடித்தார். ஆனால் அது லாங் பவுண்டரி என்பதால், சிக்ஸருக்கு கோலி அடித்த ஷாட்டின் பவர் போதவில்லை. ரஷீத் கான் அதை கேட்ச் பிடிக்க, கோலி 14 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆர்சிபி அணியின் ஹோம் கிரவுண்டான பெங்களூரு சின்னசாமி மைதானமாக இருந்திருந்தால் அது கண்டிப்பாக சிக்ஸர் தான். ஆனால் துபாய் மைதானம் பெரிது என்பதால் கோலி அடித்த ஷாட்டின் பவர் போதவில்லை.
கோலி 14 ரன்களில் ஆட்டமிழந்தாலும், டிவில்லியர்ஸ் களத்தில் நின்றதால் டெத் ஓவரில் வெளுத்துவிடுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் 19வது ஓவரில் 2 சிக்ஸரும் கடைசி ஓவரில் ஒரு பவுண்டரியும் மட்டுமே அவரால் அடிக்க முடிந்தது. கடைசி 2 ஒவர்களில் டிவில்லியர்ஸ் பெரிதாக மிரட்டவில்லை. ஆனாலும் அவர் அடித்த சில பெரிய ஷாட்டுகளால் தான் ஆர்சிபி அணி 20 ஓவரில் 163 என்ற ஸ்கோரை எட்டியது.
அரைசதம் அடித்த டிவில்லியர்ஸ், கடைசி ஓவரில் இரண்டாவது ரன் ஓடும்போது, மனீஷ் பாண்டே அடித்த துல்லியமான த்ரோவால் 51 ரன்னில் ஆட்டமிழக்க, 20 ஓவரில் 163 ரன்கள் அடித்த ஆர்சிபி, 164 ரன்கள் என்ற சவாலான இலக்கை சன்ரைசர்ஸுக்கு நிர்ணயித்தது.