#CSKvsKXIP சிஎஸ்கேவின் கையில் சிக்கிய பஞ்சாப்பின் குடுமி.. முக்கியமான இன்றைய ஆட்டத்திலும் அவரு ஆடல
பிளே ஆஃப் வாய்ப்பை தீர்மானிக்கும் முக்கியமான கடைசி போட்டியான இன்றைய போட்டியில் பஞ்சாப் அணி, சிஎஸ்கேவை எதிர்கொள்ளும் நிலையில், இந்த போட்டியிலும் பஞ்சாப் அணியின் நட்சத்திர வீரர் ஆடமாட்டார் என்றே தெரிகிறது.
ஐபிஎல் 13வது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்குகிறது. லீக் சுற்று முடிய இன்னும் 4 போட்டிகள் மட்டுமே உள்ள நிலையில், இன்னும் பிளே ஆஃபிற்கு முன்னேறும் டாப் 4 அணிகளில், 3 இடங்கள் ஓபனாகவே உள்ளன.
மும்பை இந்தியன்ஸ் மட்டுமே முதல் அணியாக பிளே ஆஃபிற்கு முன்னேறியுள்ளது. எஞ்சிய 3 இடங்களுக்கு, ஆர்சிபி, டெல்லி கேபிடள்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், சன்ரைசர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கேகேஆர் அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. இந்த ஆறு அணிகளுக்குமே எஞ்சிய 3 இடங்களை பிடிப்பதற்கான வாய்ப்புள்ளது.
அதிலும் ஆர்சிபி, டெல்லி கேபிடள்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது. தலா 14 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 2 மற்றும் 3ம் இடங்களில் இருக்கும் ஆர்சிபி மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகள் மோதும் போட்டியில் வெல்லும் அணி பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றுவிடும். தோற்கும் அணி படுதோல்வியை சந்திக்காத பட்சத்தில் நெட் ரன்ரேட்டின் அடிப்படையில் பிளே ஆஃபிற்கு முன்னேறும்.
சன்ரைசர்ஸ் அணி கடைசி போட்டியில் வலுவான மும்பை அணியை எதிர்கொள்வதால் அந்த அணியின் வெற்றி சந்தேகம். ஆனால் பஞ்சாப் அணி தனது கடைசி போட்டியில் இன்று சிஎஸ்கேவை எதிர்கொள்கிறது. சிஎஸ்கேவை வீழ்த்தினால் பஞ்சாப்பின் பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாகிவிடும். எனவே இன்றைய போட்டியில் பஞ்சாப் கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டும்.
அபுதாபியில் நடக்கும் இந்த போட்டியில் பஞ்சாப் அணியில் மயன்க் அகர்வால் இன்றைக்கும் ஆடமாட்டார் என்றே தெரிகிறது. நல்ல ஃபார்மில் அருமையாக ஆடி பஞ்சாப்பின் நட்சத்திர வீரராக ஜொலித்து நம்பிக்கையளித்துவந்த மயன்க் அகர்வால், காயம் காரணமாக கடந்த 3 போட்டிகளில் ஆடவில்லை. அவருக்கு பதிலாக மந்தீப் சிங், ராகுலுடன் தொடக்க வீரராக இறங்கிவருகிறார். அவரும் நன்றாகத்தான் ஆடுகிறார் என்றாலும், மயன்க் அகர்வால் அளவிற்கு இல்லை. மயன்க் அகர்வால் ஆடினால் அது பஞ்சாப் அணிக்கு பெரிய பலமாக அமையும். ஆனால் இன்றைய போட்டியிலும் மயன்க் ஆடமாட்டார் என்றே தெரிகிறது.
எனவே பஞ்சாப் அணி கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கும். அந்த அணியில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை.
உத்தேச கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி:
கேஎல் ராகுல்(கேப்டன், விக்கெட் கீப்பர்), மந்தீப் சிங், கிறிஸ் கெய்ல், நிகோலஸ் பூரான், மேக்ஸ்வெல், கிறிஸ் ஜோர்டான், தீபக் ஹூடா, முருகன் அஷ்வின், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், ஷமி.