RCB vs KXIP: யுனிவர்ஸ் பாஸ் ஆடுகிறார்.. உறுதி செய்த கோச்.. உற்சாகத்தில் ரசிகர்கள்
ஆர்சிபிக்கு எதிரான இன்றைய போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் கெய்ல் ஆடுவது உறுதியாகியுள்ளது.
ஐபிஎல் 13வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இந்த சீசனில் ஆடிய முதல் 7 போட்டிகளில் பஞ்சாப் அணி ஒரேயொரு வெற்றியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள நிலையில், இன்றைய போட்டியில் ஆர்சிபியை எதிர்கொள்கிறது பஞ்சாப் அணி.
பஞ்சாப் அணியில் தொடக்க வீரர்கள் ராகுல் மற்றும் மயன்க் அகர்வாலை தவிர வேறு யாருமே சரியாக ஆடுவதில்லை. இந்த சீசனில் பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக கேஎல் ராகுலும் மயன்க் அகர்வாலும் இறங்கிவரும் நிலையில், இருவரும் மிகச்சிறப்பாக ஆடி இந்த சீசனில் இதுவரை அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிரண்டு இடங்களில் உள்ளனர். ராகுல் 387 ரன்களையும் மயன்க் அகர்வால் 337 ரன்களையும் குவித்துள்ளனர். அவர்கள் இருவரும் டாப்பில் இருந்தாலும், அவர்கள் அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
இருவரும் ஓபனிங்கில் நன்றாக செட் ஆகிவிட்டதால், கெய்ல் இந்த சீசனில் இதுவரை ஆடவில்லை. அவருக்கு உடல் உபாதை இருந்ததும் ஒரு காரணம். வயிற்று பிரச்னை காரணமாக கடந்தன் சில தினங்களாக மருத்துவமனையில் இருந்த கெய்ல், பூரண குணமடைந்து மருத்துவமனையிலிருந்து திரும்பிவிட்டார்.
இந்நிலையில், கெய்ல் முழு உடற்தகுதியுடன் இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுவிட்டது. அதனால் அவர் ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் ஆட வேண்டும் என்றும் அவரையும் மயன்க் அகர்வாலையும் தொடக்க வீரர்களாக இறக்கிவிட்டு, ராகுல் 3ம் வரிசையில் ஆட வேண்டும் என்று சேவாக் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், கெய்ல் குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் பேசிய பஞ்சாப் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் வாசிம் ஜாஃபர், கெய்லை நாங்கள் மிஸ் செய்தோம். கடந்த 2-3 போட்டிகளிலேயே அவர் ஆடியிருக்க வேண்டியது. ஆனால் வயிற்றில் பிரச்னை ஏற்பட்டதன் விளைவாக மருத்துவமனையில் இருந்தார். இப்போது முழு ஃபிட்னெஸுடன் உள்ளார். ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் ஆடுவார் என்று தெரிவித்துள்ளார்.
யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெய்ல் ஐபிஎல்லின் வெற்றிகரமான அதிரடி வீரர். குறிப்பாக அவரது பழைய அணியான ஆர்சிபிக்கு எதிராக நல்ல ரெக்கார்டை வைத்துள்ளார். மேலும் இந்த போட்டி சிறிய மைதானமான ஷார்ஜாவில் நடப்பதால், கெய்ல் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.