ஐபிஎல்லில் தினேஷ் கார்த்திக்கின் அதிவேக அரைசதம்.. வழக்கம்போலவே கடைசி நேரத்தில் கோட்டைவிட்ட பஞ்சாப்
கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிராக முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணி, தினேஷ் கார்த்திக்கின் அதிரடி அரைசதத்தால், சவாலான இலக்கை பஞ்சாப்புக்கு நிர்ணயித்துள்ளது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையேயான போட்டி அபுதாபியில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் தினேஷ் கார்த்திக், பேட்டிங்கை தேர்வு செய்தார்.
கேகேஆர் அணியின் தொடக்க வீரர்கள் ஷுப்மன் கில்லும், ராகுல் திரிபாதியும் களத்திற்கு வரவே, பவர்ப்ளேயில் ஷமியும் அர்ஷீப்பும் சிங்கும் இணைந்து அருமையாக பந்துவீசினர். ராகுல் திரிபாதியை பேட்டிங் முனையில் நிறுத்தி, 2வது ஓவரில் ஒரு ரன்னை கூட கொடுக்காமல் மெய்டன் ஓவராக வீசினார் அர்ஷ்தீப்.
பவர்பிளேயில் கேகேஆர் அணி 2 விக்கெட்டுகளை இழந்து வெறும் 25 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது. 4ம் வரிசையில் இறங்கிய மோர்கன், 23 பந்தில் 24 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழக்க, ஒருமுனையில் கில் மட்டும் நிலைத்து நின்றார்.
மோர்கன் ஆட்டமிழந்த பிறகு கில்லுடன் கேப்டன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். கில் நிதானமாக நின்று அரைசதம் அடித்தார். 15வது ஓவரில்தான் கேகேஆர் அணி 100 ரன்களையே எட்டியது. 15 ஓவர் முடிவில் 101 ரன்கள் அடித்திருந்தது கேகேஆர் அணி.
150 ரன்களில் கேகேஆர் அணியை சுருட்டியிருக்க வேண்டிய நிலையில், இதற்கு முன் பஞ்சாப் தோற்ற அனைத்து போட்டிகளிலுமே எப்படி கடைசி ஐந்து ஓவர்களில் சொதப்பியதோ அதேபோலவே இந்த போட்டியிலும் சொதப்பினர்.
ஃபார்மை தேடிக்கொண்டிருந்த கேகேஆர் கேப்டன் தினேஷ் கார்த்திக், இந்த இன்னிங்ஸை அதற்கு பயன்படுத்தி கொண்டார். 16வது ஓவரில் 3 பவுண்டரிகளை விளாசிய தினேஷ் கார்த்திக், ஜோர்டான் வீசிய அடுத்த ஓவரில் ஒரு சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரிகளை விளாசினார். ஷமி வீசிய 18வது ஓவரில் முதல் 3 பந்தில் 2 பவுண்டரிகளுடன் 10 ரன்களை சேர்த்ததுடன் 22 பந்தில் அரைசதம் அடித்தார் தினேஷ் கார்த்திக். ஐபிஎல்லில் தினேஷ் கார்த்திக்கின் அதிவேக அரைசதம் இதுதான்.
அந்த ஓவரில் கில் 57 ரன்களில் அவுட்டாக, அர்ஷ்தீப் வீசிய 19வது ஓவரில் ஒரேயொரு பவுண்டரி மட்டும் அடித்த ஆண்ட்ரே ரசல் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் தினேஷ் கார்த்திக் ஒரேயொரு பவுண்டரி மட்டுமே அடிக்க, 20 ஓவரில் 164 ரன்கள் அடித்த கேகேஆர், 165 ரன்களை பஞ்சாப்புக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது. 15 ஓவரில் 101 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்த பஞ்சாப், கடைசி ஐந்து ஓவர்களில் 63 ரன்களை வாரி வழங்கினர். அதனால் தான் இந்த ஸ்கோர் கிடைத்தது.
வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கும் பஞ்சாப் அணியில் கேஎல் ராகுல், மயன்க் அகர்வால் நல்ல ஃபார்மில் ஆடிக்கொண்டிருக்கும் நிலையில், நிகோலஸ் பூரானும் ஃபார்மிற்கு வந்துவிட்டதாலும், இலக்கு மிகக்கடினமானது இல்லை என்பதால் பஞ்சாப் அணி நம்பிக்கையுடன் இறங்கும். அதேவேளையில், கேகேஆர் அணியிலும் பாட் கம்மின்ஸ், ரசல், வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன், நாகர்கோட்டி என நல்ல பவுலிங் யூனிட் இருப்பதால் இரண்டாவது இன்னிங்ஸ் கடும் போட்டியாக இருக்கும்.