நான் எதிர்கொண்டதுலயெ ரொம்ப கஷ்டமான பவுலர் அவருதான்..! ஐபிஎல்லில் அசத்திய தேவ்தத் படிக்கல் ஓபன் டாக்
ஐபிஎல்லில் அசத்தலாக ஆடி அனைவரின் பாராட்டையும் பெற்ற தேவ்தத் படிக்கல் தான் எதிர்கொண்டதில் யாருடைய பவுலிங் மிகவும் சவாலாக இருந்தது என தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 13வது சீசன் இளம் வீரர்களுக்கான சீசனாக அமைந்தது. இளம் வீரர்களான தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட இளம் வீரர்கள் அருமையாக ஆடினர்.
ஆர்சிபி அணியின் தொடக்க வீரராக இறங்கிய தேவ்தத் படிக்கல், அறிமுக போட்டியிலேயே அரைசதம் அடித்து அசத்தினார். இந்த சீசனில் ஐந்து அரைசதங்களுடன் 473 ரன்களை குவித்தார். தேவ்தத் படிக்கல் யுவராஜ் சிங் மற்றும் மேத்யூ ஹைடனுடன் ஒப்பிடப்பட்டார்.
பிசிசிஐ தலைவர் கங்குலி உட்பட பெரும் ஜாம்பவான்கள் பலரை கவர்ந்த தேவ்தத் படிக்கல், இந்த சீசனில் தனக்கு பெரும் சவாலாக இருந்த பவுலர் ரஷீத் கான் தான் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தேவ்தத் படிக்கல், நான் எதிர்கொண்ட வரையில் ரஷீத் கான் தான் சற்று கடினமான பவுலர். நல்ல வேகத்தில் வீசக்கூடிய ரஷீத் கான், பந்தை திருப்பவும் செய்கிறார். எனவே அவரது பவுலிங் சவாலாக இருந்தது என தெரிவித்துள்ளார்.