ஐயா நான் பண்ணது தப்புதான்; அம்பயரிடம் சரணடைந்த ஏபிடி..!
ஆர்சிபிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் டிவில்லியர்ஸால் சன்ரைசர்ஸுக்கு ஒரு நோ பால் கிடைத்தது.
ஐபிஎல் 13வது சீசனின் எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் ஆர்சிபியும் மோதின.
இந்த போட்டியில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சன்ரைசர்ஸ் அணி, 2வது தகுதிச்சுற்று போட்டிக்கு தகுதிபெற, ஆர்சிபி அணி தொடரை விட்டு வெளியேறியது.
இந்த போட்டியில் ஆர்சிபி அணி 131 ரன்கள் அடித்தது. 132 ரன்கள் என்ற இலக்கை கடைசி ஓவரில் அடித்து சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணியின் பேட்டிங்கின்போது, வாஷிங்டன் சுந்தர் வீசிய ஐந்தாவது ஓவரின் 2வது பந்தை வார்னர், கவர் திசையில் அடிக்க, ஸ்டம்ப்பில் லைட் எறிந்ததால், வார்னர் தான் பேட்டால் ஸ்டம்ப்பை அடித்துவிட்டாரோ என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், வார்னர் பந்தை அடிக்கும் முன்பாக, ஆர்சிபி விக்கெட் கீப்பர் டிவில்லியர்ஸ், பெய்ல்ஸை தட்டிவிட்டார்.
எம்சிசி விதிப்படி, பேட்ஸ்மேன் பந்தை ஆடுவதற்கு முன்பு, ஸ்டம்ப்பையோ பேட்ஸ்மேனையோ தொந்தரவு செய்வது தவறு என்பதால், அதற்கு நோ பால் கொடுக்கப்பட்டது. ஆனால் டிவில்லியர்ஸ், தனது கை ஸ்டம்ப்பில் பட்டதுமே, தன் தவறை ஏற்றுக்கொண்டார். அதனால் அந்த பந்துக்கு நோ பால் கொடுக்கப்பட்டு ரீ பால் வீசப்பட்டது.