ஐபிஎல் 2020: அப்படியொரு அதிரடி முடிவை எடுத்தது ஏன்..? சிஎஸ்கே கோச் ஸ்டீஃபன் ஃப்ளெமிங் விளக்கம்
சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி எடுத்த அதிரடி முடிவு குறித்து விளக்கமளித்துள்ளார் அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃப்ளெமிங்.
ஐபிஎல் 13வது சீசன் பாதி கட்டத்தை கடந்துவிட்ட நிலையில், முதல் பாதியில் தொடர் தோல்விகளை தழுவி, 7 போட்டிகளில் வெறும் 2 வெற்றிகளை மட்டுமே பெற்ற சிஎஸ்கே அணி, சன்ரைசர்ஸுக்கு எதிரான கடந்த போட்டியில் வெற்றி பெற்று, கம்பேக் கொடுத்துள்ளதுடன், பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது.
இந்த சீசனில் தொடக்கத்திலிருந்தே சிஎஸ்கே அணியில் சிறப்பாக ஆடிவரும் ஒரே பேட்ஸ்மேன் டுப்ளெசிஸ் மட்டுமே. ஆல்ரவுண்டர் சாம் கரன் எந்த ஆர்டரில் இறக்கிவிடப்பட்டாலும், தன்னால் முடிந்த நல்ல பங்களிப்பை வழங்கிவந்தார். ஆனாலும் அவரது திறமைக்கு தகுந்த முழு பங்களிப்பை வழங்குவதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைக்காமல் இருந்தது.
அப்படியான சூழலில், சன்ரைசர்ஸுக்கு எதிராக சாம் கரன் தொடக்க வீரராக இறக்கிவிடப்பட்டார். அதற்கு பலனும் கிடைத்தது. டுப்ளெசிஸ் முதல் பந்திலேயே டக் அவுட்டானார். அணியின் சீனியர் மற்றும் நட்சத்திர வீரரான தனது பார்ட்னர் ஆட்டமிழந்த போதிலும், அதைப்பற்றி கவலைப்படாமல் பவர்ப்ளேயை பயன்படுத்தி, அடித்து ஆடி 21 பந்தில் 31 ரன்களை விளாசினார் சாம் கரன். அவரது அதிரடியான தொடக்கத்தால் தான், பின் வரிசை வீரர்கள் அதிரடியாக ஆடாவிட்டாலும், நல்ல ஸ்கோரை சிஎஸ்கே எட்ட முடிந்தது.
அந்தவகையில், சன்ரைசர்ஸுக்கு எதிராக சாம் கரனின் பேட்டிங் பங்களிப்பு மிக முக்கியமானது.
இந்நிலையில், சாம் கரனை தொடக்க வீரராக இறக்கிவிட்டது குறித்து பேசிய சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃப்ளெமிங், சாம் கரனை இந்த சீசனின் ஆரம்பத்திலிருந்தே, அவரை பல இன்னிங்ஸ்களின் இடையில் இறக்கிவிட நினைத்தோம். ஆனால் விக்கெட்டுகள் சரிவால், அவரை இறக்க முடியவில்லை. அதிகமான பேட்டிங் ஆப்சன்கள் இருப்பதும் சிக்கல் தான். எனவே அது சிக்கலாக அமைந்துவிடக்கூடாது என்பதற்காக, சாம் கரனை தொடக்கத்தில் இறக்கிவிட்டு, ஆரம்பத்திலேயே முமெண்ட்டத்தை ஏற்படுத்தும் முனைப்பில் இறக்கினோம் என்று ஃப்ளெமிங் தெரிவித்தார்.