DC vs CSK: கடைசி ஓவரை பிராவோவிடம் கொடுக்காமல் ஜடேஜாவின் கொடுத்தது ஏன்..? தெளிவுபடுத்திய தோனி
டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரை ஜடேஜாவிடம் கொடுத்தது ஏன் என சிஎஸ்கே கேப்டன் தோனி விளக்கமளித்துள்ளார்.
ஐபிஎல் 13வது சீசன் பாதி கட்டத்தை கடந்துவிட்ட நிலையில், இந்த சீசனில் பிளே ஆஃப் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்துவிட்டது சிஎஸ்கே.
இதுவரை ஆடிய அனைத்து சீசன்களிலும் பிளே ஆஃபிற்கு தகுதிபெற்ற ஒரே அணி என்ற பெருமைக்கும் சாதனைக்கும் சொந்தக்கார சிஎஸ்கே அணி, இந்த சீசனில் சரியாக ஆடவில்லை. இதுவரை ஆடிய 9 போட்டிகளில் வெறும் 3 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. எனவே பிளே ஆஃபிற்கு தகுதிபெறுவது கடினம்.
டெல்லி கேபிடள்ஸுக்கு எதிராக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் ஆடிய சிஎஸ்கே அணி, முதலில் பேட்டிங் ஆடி, டுப்ளெசிஸின் அரைசதம், ராயுடுவின் பங்களிப்பு மற்றும் கடைசி நேர ஜடேஜாவின் அதிரடியால்(13 பந்தில் 33 ரன்கள்) 20 ஓவரில் 179 ரன்கள் அடித்தது.
ஷார்ஜா சிறிய மைதானம் என்பதால் 180 ரன்கள் என்பது அடிக்கக்கூடிய இலக்குதான்; கடினமானது அல்ல. பிரித்வி ஷா, ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர், மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகியோரை பெரியளவில் அடிக்கவிடாமல் வீழ்த்திய சிஎஸ்கே அணி, தவானை மட்டும் ஒருமுனையில் நிலைத்து ஆடவிட்டது. தவானுக்கு 3 கேட்ச் வாய்ப்புகளும் தவறவிடப்பட்டன. அதை பயன்படுத்தி சதமடித்த தவான், கடைசி வரை களத்தில் நின்று டெல்லி கேபிடள்ஸுக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார்.
கடைசி 2 ஓவரில் டெல்லி அணியின் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 19வது ஓவரை அருமையாக வீசி 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார் சாம் கரன். கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட, களத்தில் தவான் மற்றும் அக்ஸர் படேல் ஆகிய 2 இடது கை பேட்ஸ்மேன்கள் களத்தில் நிற்க, கடைசி ஓவரை இடது கை ஸ்பின்னரான ஜடேஜாவிடம் கொடுத்தார் தோனி.
ஷார்ஜா மைதானமோ சிறியது; களத்தில் இருப்பதோ 2 இடது கை பேட்ஸ்மேன்கள். அப்படியிருக்கையில் தோனி ஏன் கடைசி ஓவரை ஜடேஜாவிடம் கொடுத்தார் என்பது புரியாத புதிராக இருந்ததுடன் ரசிகர்களுக்கு ஏகப்பட்ட கேள்விகளை எழுப்பியது. ஜடேஜா வீசிய கடைசி ஓவரில் அக்ஸர் படேல் 3 சிக்ஸர்களை விளாசி டெல்லி அணிக்கு அபார வெற்றியை பெற்றுக்கொடுத்தார். சிஎஸ்கே ரசிகர்கள் அதிருப்தியடைந்தனர்.
இதையடுத்து போட்டிக்கு பின்னர், கடைசி ஓவரை ஜடேஜாவிடம் கொடுத்தது குறித்து விளக்கமளித்த தோனி, பிராவோ ஃபிட்டாக இல்லை. அவர் களத்தை விட்டு வெளியேறிவிட்டார். அவரால் பந்துவீச முடியவில்லை. எனவே ஜடேஜா அல்லது கரன் ஷர்மா ஆகிய இருவரில் ஒருவரிடம் கொடுத்தாக வேண்டிய கட்டாயம் இருந்தது. அவர்கள் இருவரில் ஒருவர் எனும்போது, நான் ஜடேஜாவிடம் கொடுத்தேன் என்றார் தோனி.
பிராவோவிடம் கடைசி ஓவரை கொடுக்கலாம் என்பதால் தான், தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், சாம் கரன் ஆகியோரின் கோட்டாவை முடித்தார் தோனி. ஆனால் துரதிர்ஷ்டவசமாக பிராவோவால் கடைசி ஓவரை வீச முடியவில்லை.