#IPL2020 தாதாவை கவர்ந்த 6 இளம் வீரர்கள்..!
ஐபிஎல் 13வது சீசனில் கங்குலியை கவர்ந்த ஆறு இளம் வீரர்கள் யார் யார் என்று பார்ப்போம்.
ஐபிஎல் 13வது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. வரும் 10ம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த இந்த ஐபிஎல் சீசன், முழுக்க முழுக்க இளம் வீரர்களுக்கான சீசனாக அமைந்தது. தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், ரவி பிஷ்னோய் ஆகிய இளம் வீரர்கள் அருமையாக ஆடி அனைவரின் பார்வையையும் ஈர்த்தனர்.
அந்தவகையில், இந்த சீசனில் தன்னை கவர்ந்த, ஆறு இளம் வீரர்கள் யார் யார் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.
சஞ்சு சாம்சன்(ராஜஸ்தான் ராயல்ஸ்)
இந்த சீசனை அபாரமாக தொடங்கி பின்னர் பெரும் சறுக்கலை சந்தித்து, லீக்கின் இறுதிக்கட்டத்தில் மீண்டும் அசத்திய சஞ்சு சாம்சன், இந்த சீசனில் 14 போட்டிகளில் 158.89 என்ற ஸ்டிரைக் ரேட்டுடன் 375 ரன்களை குவித்தார். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கான இந்திய டி20 அணியில் இடத்தையும் பிடித்தார்.
ராகுல் திரிபாதி(கேகேஆர்)
கேகேஆர் அணிக்காக இந்த சீசனில் குறைவான போட்டிகளிலேயே ஆட வாய்ப்பு கிடைத்த ராகுல் திரிபாதி, ஓரளவிற்கு அந்த வாய்ப்புகளை பயன்படுத்தி 127.07 என்ற ஸ்டிரைக் ரேட்டுடன் 230 ரன்கள் அடித்தார்.
வருண் சக்கரவர்த்தி(கேகேஆர்)
இந்த ஒரே சீசனில் ஓஹோனு பெயர் பெற்ற முக்கியமான வீரர் கேகேஆர் அணியில் ஆடும் தமிழகத்தை சேர்ந்த ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி தான். இந்த சீசனில் நன்றாக வீசியதன் விளைவாக, இந்திய டி20 அணியில் இடம்பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் அவர் இடம்பிடித்துள்ளார். இந்த சீசனில் 13 போட்டிகளில் ஆடி 17 விக்கெட்டுகளை வீழ்த்தி கேகேஆர் அணியின் வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார்.
ஷுப்மன் கில்(கேகேஆர்)
கேகேஆர் அணியின் இளம் தொடக்க வீரர் ஷுப்மன் கில், 14 போட்டிகளில் ஆடி 440 ரன்கள் அடித்தார். அவரது பேட்டிங் இந்த சீசனில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை எனும்போதிலும், அவரது பேட்டிங் வழக்கம்போல சிறப்பாகவே இருந்தது.
தேவ்தத் படிக்கல்(ஆர்சிபி)
கர்நாடகாவை சேர்ந்த இளம் இடது கை அதிரடி தொடக்க வீரர் தேவ்தத் படிக்கல், இந்த ஐபிஎல் சீசனின் இளம் நாயகன். அருமையாக ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த படிக்கல், ஒரே சீசனில் யுவராஜ் சிங்குடன் ஒப்பிடப்படுகிறார். இந்த சீசனில் 14 போட்டிகளில் 472 ரன்களை குவித்துள்ளார்.
சூர்யகுமார் யாதவ்(மும்பை இந்தியன்ஸ்)
சூர்யகுமார் யாதவ் கடந்த சில சீசன்களாகவே ஐபிஎல் மற்றும் ரஞ்சி தொடர் உள்ளிட்ட உள்நாட்டு போட்டிகளில் மிகச்சிறப்பாக ஆடி ஸ்கோர் செய்துவரும் நிலையில், அவர் இந்திய அணியில் புறக்கணிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், மிகச்சிறந்த வீரரான சூர்யகுமார் யாதவுக்கான நேரம் கண்டிப்பாக வரும் என நம்பிக்கை தெரிவித்தார் கங்குலி.