ரசிகர்களுக்கு செம குட் நியூஸ் சொன்ன தாதா.. ஐபிஎல் 2021 சீசன் குறித்த முக்கியமான அப்டேட்
ஐபிஎல் 14வது சீசன் குறித்த அப்டேட்டை பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் பொதுவாக மார்ச் - மே காலக்கட்டத்தில் நடக்கும். இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப்போன ஐபிஎல், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. அடுத்த சீசன் எங்கு நடக்கப்போகிறது என்பதுதான் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் பேராவலாக உள்ளது.
கொரோனா சவால்களுக்கு இடையே ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் வெற்றிகரமாக நடந்து முடியவுள்ள நிலையில், அடுத்த சீசனாவது இந்தியாவில் நடக்குமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் ஆவலாகவும் உள்ளது.
இந்நிலையில், அடுத்த ஐபிஎல் சீசன் குறித்து பேசிய பிசிசிஐ தலைவர் கங்குலி, அடுத்த சீசன் குறித்து இதுவரை எதுவும் முடிவும் செய்யவில்லை. முதலில் இந்த சீசன் வெற்றிகரமாக நடந்து முடியட்டும். அதன்பின்னர் அதுகுறித்து முடிவு செய்வோம்.
கொரோனா தடுப்பு மருந்து விரைவில் வந்துவிடும் என நம்புவோம். அப்படி வந்துவிட்டால், அடுத்த சீசனை இந்தியாவிலேயே நடத்துவோம் என்றார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அதன் கோர் டீமை மாற்றும் முனைப்பில் உள்ளது. பெரிய ஏலமா அல்லது சின்ன ஏலமா என்பது குறித்தும் முடிவு செய்யவில்லை என்றார் கங்குலி.