துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் - மோடி சந்திப்பு!
துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனை பிரதமர் மோடி சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். ஜகதீப் தன்கர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து செப்டம்பர் 9-ம் தேதி துணை குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறுகிறது.

சி.பி.ராதாகிருஷ்ணன் - மோடி சந்திப்பு
துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சுகாதார காரணங்களுக்காக துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் ஜூலை 21 அன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து, புதிய துணை குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெறுகிறது.
துணை குடியரசுத் தலைவர் வேட்பாளர்
இந்த நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) சார்பில் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா நேற்று அறிவித்தார். பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்ற பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டத்திற்குப் பிறகு இந்த முடிவு அறிவிக்கப்பட்டது.
வேட்பாளர் அறிவிப்புக்குப் பின்னர், பிரதமர் மோடி தனது 'எக்ஸ்' (X) சமூக வலைதளப் பக்கத்தில் சி.பி.ராதாகிருஷ்ணனைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததாகப் பதிவிட்டுள்ளார்.
மோடி பதிவு
"திரு. சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களைச் சந்தித்தேன். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்தேன். பொது வாழ்க்கையில் அவரது நீண்ட அனுபவமும், பல்வேறு துறைகளில் அவரது அனுபவமும் நம் தேசத்தை மேலும் செழுமைப்படுத்தும். அவர் எப்போதும் போல அதே அர்ப்பணிப்புடனும் உறுதியுடனும் தேசத்திற்கு சேவை செய்ய வாழ்த்துகிறேன்" என்று மோடி அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு முறை எம்.பி.
கோயம்புத்தூரில் இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணன், தற்போது மகாராஷ்டிரா மாநில ஆளுநராகப் பதவி வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.