- Home
- இந்தியா
- வந்தே பாரத் இல்லை... இந்தியாவில் அதிக வருவாய் ஈட்டும் ரயில் எது தெரியுமா? ஆண்டுக்கு 176 கோடியாம்..!
வந்தே பாரத் இல்லை... இந்தியாவில் அதிக வருவாய் ஈட்டும் ரயில் எது தெரியுமா? ஆண்டுக்கு 176 கோடியாம்..!
இந்தியாவில் அதிக வருமானம் ஈட்டக்கூடிய ரயிலை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம். அந்த ஒரு ரயில் மூலம் மட்டும் 176 கோடி ரூபாய் இந்திய ரயில்வேக்கு வருமானமாக கிடைத்துள்ளதாம்.

Most Profitable train in India
இந்திய ரயில்வேயில் பயணிகளிடையே மிகவும் பிரபலமான ரயிலாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் திகழ்கிறது. நவீன வசதிகள், அதிவேக பயணம் என்று பலவற்றால் கவனம் ஈர்க்கும் இந்த ரயிலின் டிக்கெட் கட்டணம், ஷதாப்தி மற்றும் ராஜதானி போன்ற சிறந்த ரயில்களை விட சுமார் 33 சதவீதம் அதிகமாக உள்ளது. தற்போது நாடு முழுவதும் வடகிழக்கு மாநிலங்களைத் தவிர 114 வந்தே பாரத் ரயில்கள் இயக்கத்தில் உள்ளன. பல பாதைகளில் 100 சதவீதத்திற்கும் அதிகமான இருக்கை நிரப்பு விகிதம் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிக வருவாய் ஈட்டும் ரயில்
அதிக கட்டணம், அதிக பயணிகள் என்று பார்க்கும்போது வந்தே பாரத்தே அதிக வருவாய் ஈட்டும் ரயில் என நினைக்கலாம். ஆனால் உண்மை நிலவரம் வேறாக உள்ளது. இந்திய ரயில்வேக்கு மிக அதிக வருவாயை ஈட்டித் தரும் ரயில் என்னவென்றால் அது பெங்களூரு ராஜதானி எக்ஸ்பிரஸ் தான். இந்த ரயில் டில்லியின் ஹஸ்ரத் நிஜாமுதீன் நிலையத்திலிருந்து கர்நாடகாவின் பெங்களூரு வரை இயங்குகிறது. குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இது புது டில்லி அல்லது பழைய டில்லி நிலையங்களிலிருந்து புறப்படுவதில்லை.
பெங்களூரு ராஜ்தானி எக்ஸ்பிரஸ்
ஆண்டுதோறும் சுமார் 5.09 லட்சம் பயணிகளை ஏற்றிச் செல்லும் இந்த ரயில், வருடாந்திர வருவாயாக சுமார் ரூ. 176 கோடியை ஈட்டுகிறது. வருவாயில் இரண்டாம் இடத்தில் சியால்தா ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் உள்ளது. புது டில்லியிலிருந்து கொல்கத்தாவின் சியால்தா வரை இயங்கும் இந்த ரயில், ஆண்டுக்கு சுமார் 5,09,164 பயணிகளை அழைத்துச் செல்கிறது. இதன் வருடாந்திர வருவாய் ரூ. 128.8 கோடி. மூன்றாம் இடத்தில் புது டில்லி – திப்ரூகர் ராஜதானி எக்ஸ்பிரஸ் நிலைகொண்டுள்ளது. இது ஆண்டுதோறும் ரூ. 126.3 கோடி வருவாயை ஈட்டுகிறது.
ரயிலின் சிறப்பம்சம்
இந்த ராஜ்தானி எக்ஸ்பிரஸ் பெங்களூருவில் இருந்து நிஜாமுதீன் வரை வாரத்தின் 7 நாட்களும் இயக்கப்படுகிறது. மொத்தம் 15 ஸ்டாப்களை கொண்ட இந்த ரயில், பெங்களூருவில் இருந்து நிஜாமுதீனுக்கு இடையேயான மொத்தமுள்ள 2 ஆயிரத்து 366 கிலோமீட்டரை 33 மணிநேரம் 30 நிமிடங்களில் கடந்துவிடும். இந்த ரயில் அதிகபட்சமாக 130 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் பெங்களூருவில் இருந்து தினந்தோறும் இரவு 8 மணிக்கு இயக்கப்படுகிறது. மறு மார்கமாக நிஜாமுதீனில் இருந்து இரவு 7.45 மணிக்கு கிளம்புமாம்.

