Surekha Yadav: வந்தே பாரத் ரயிலில் முதல் பெண் ஓட்டுநர் சுரேகா யாதவ்
1988ஆம் ஆண்டில் ஆசியாவின் முதல் பெண் லோகோ பைலட் (ரயில் ஓட்டுநர்) என்ற பெருமையைப் பெற்ற சுரேகா யாதவ், வந்தே பாரத் ரயிலை இயக்கும் முதல் பெண்மணி என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளார்.
ஆசியாவின் முதல் பெண் லோகோ பைலட் (ரயில் ஓட்டுநர்) சுரேகா யாதவ், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்கும் முதல் பெண்மணி என்ற பெருமையையும் பெற்றுள்ளார். திங்கட்கிழமை, மும்பையில் உள்ள சோலாப்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையம் (சிஎஸ்எம்டி) வரைக்குமான வந்தே பாரத் ரயிலை இயக்கியதன் மூலம் இந்தச் சாதனைப் படைத்தார்.
சுரேகா யாதவ் 1988 இல் இந்தியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர் ஆனார். மேற்கு மகாராஷ்டிரா பிராந்தியத்தில் உள்ள சதாராவைச் சேர்ந்த யாதவ், தனது சாதனைகளுக்காக இதுவரை மாநில மற்றும் தேசிய அளவில் பல விருதுகளை வென்றுள்ளார்.
"அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட வந்தே பாரத் ரயிலை ஓட்டும் வாய்ப்பை வழங்கியதற்காக சுரேகா யாதவ் ரயில்வே துறைக்கு நன்றி தெரிவித்தார்" என்று மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
சுரேகா முதலில் இயக்கிய மெட்ரோ ரயில் சரியான நேரத்தில் சோலாப்பூரில் இருந்து புறப்பட்டு உரிய நேரத்திற்கு 5 நிமிடங்கள் முன்பே CSMT நிறுத்தத்தை அடைந்ததாகவும் ரயில்வே கூறியுள்ளது.
சுமார் 450 கிமீ தொலைவுக்கு நீண்ட பயணத்தை வெற்றிகரமாக முடித்ததும், சிஎஸ்எம்டி ரயில் நிலையத்தின் 8வது நடைமேடையில் சுரேகா யாதவ் கௌரவிக்கப்பட்டார்.
முன்னதாக சர்வதேச மகளிர் தினத்தன்று முன்னிடு கடந்த மார்ச் 8ஆம் தேதி, மும்பை - புனே டெக்கான் குயின் எக்ஸ்பிரஸ் மற்றும் சிஎஸ்எம்டி-கல்யாண் மகளிர் சிறப்பு உள்ளூர் ரயில் ஆகியவை முழுக்க முழுக்க பெண் பணியாளர்களுடன் இயக்கப்பட்டன. அப்போது சுரேகா டெக்கான் குயின் ரயிலை இயக்கினார். துணை ஓட்டுநராக சயாலி சாவர்டேகரும் என்பவரும் உடன் இருந்தார்.
யாதவின் சாதனையை ட்விட்டர் பதிவில் பாராட்டிய மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், "வந்தே பாரத் பெண்களின் ஆற்றலைக் கொண்டு இயக்கப்படுகிறது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் முதல் பெண் லோகோ பைலட் ஸ்ரீமதி சுரேகா யாதவ்" என்று கூறிப்பிட்டிருக்கிறார்.