சூடானில் மரண ஓலம்.. பள்ளியில் கொடூர தாக்குதலில் 46 குழந்தைகள் உள்பட 116 பேர் பலி
சூடான் தெற்கு கோர்டோஃபான் மாகாணத்தில் துணை ராணுவப் படையினர் (RSF) நடத்திய கொடூரத் தாக்குதலில் 116 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். மழலையர் பள்ளியில் இருந்த 46 குழந்தைளும் பலியாகியுள்ளனர்.

சூடானில் உள்நாட்டுப் போர்
சூடானில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், RSF எனப்படும் துணை ராணுவப் படையினர் நடத்திய கொடூரத் தாக்குதலில் தெற்கு கோர்டோஃபான் மாகாணத்தில் உள்ள கலோகி என்ற பகுதியில் குறைந்தது 116 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
பலியானவர்களில் 46 குழந்தைகள் அடங்குவர். இந்தக் குழந்தைகள் அனைவரும் மழலையர் பள்ளியில் இருந்தவர்கள் என்று உள்ளூர் நிர்வாக இயக்குநர் அல் ஜசீரா செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தியுள்ளார்.
பள்ளி, மருத்துவமனை இலக்கு
இந்தத் தாக்குதல் குறித்து அரசாங்கத்துடன் கூட்டணி வைத்துள்ள சூடானிய ஆயுதப் படைகளின் (SAF) இரண்டு இராணுவ அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளடர். வியாழக்கிழமை முதலிலில் மழலையர் பள்ளியைத் தாக்கியதாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்தத் தாக்குதலில் படுகாயம் அடைந்து இரத்தக் களங்கத்தில் கிடந்தவர்களுக்கு உதவ முயன்ற பொதுமக்களையும் துணை ராணுவப் படைகள் குறிவைத்துத் தாக்கினர்.
அப்பகுதியில் உள்ள மருத்துவமனை மற்றும் அரசு அலுவலகம் மீதும் குண்டுவீச்சு நடத்தப்பட்டது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்ற கவலை எழுந்துள்ளது. காயமடைந்தவர்களுக்கு உதவி செய்பவர்களுக்கும் ஆபத்தான சூழல் நிலவுகிறது.
ஐ.நா. கண்டனம்
இந்தக் கொடூரமான தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (UNICEF) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சூடானுக்கான UNICEF பிரதிநிதி ஷெல்டன் யெட் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "குழந்தைகளை அவர்களது பள்ளியிலேயே கொல்வது என்பது குழந்தைகளின் உரிமைகளை மீறும் ஒரு கொடூரமான செயல்" என்று கண்டித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், "இந்தத் தாக்குதல்களை உடனடியாக நிறுத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவைப்படுபவர்களுக்கு உதவிகள் பாதுகாப்பாகச் சென்றடைய அனைத்துத் தரப்பினரும் அனுமதிக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

