பள்ளி மாணவிகளுக்கு மாதம் 3 நாள் மாதவிடாய் விடுப்பு.. அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
மாதவிடாய் விடுப்பு, குழந்தைகள் பராமரிப்பு மையங்கள், பெண்களுக்கு சம ஊதியம் உள்ளிட்ட திட்டங்கள் மாநில அரசின் புதிய கொள்கை உரையில் இடம்பெற்றுள்ளன.

பள்ளி மாணவிகள் விடுப்பு
பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனில் புதிய முன்னேற்றங்களை நோக்கி கேரள அரசு பல முக்கிய திட்டங்களை முன்வைத்துள்ளது. அதில் அதிக கவனம் பெற்றிருப்பது, பள்ளி மாணவிகளுக்கு மாதந்தோறும் அதிகபட்சம் 3 நாட்கள் மாதவிடாய் விடுப்பு வழங்கும் திட்டமாகும். மாநில சட்டப்பேரவை ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகர் வாசித்த கொள்கை உரையில் இந்த அறிவிப்பு இடம்பெற்றுள்ளது.
‘மென்ஸ்ட்ருவல் டிக்னிட்டி’ திட்டத்தின் கீழ் கல்வி நிறுவனங்களையும் பொதுஇடங்களையும் பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு ஏற்ற வகையில் மாற்றுவது அரசின் நோக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மாதவிடாய் காரணமாக மாணவிகள் கல்வியில் பின்தங்காத வகையில், விடுப்புக்கு மாற்றமாக வார இறுதிகளில் கூடுதல் வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பெண்களின் உடல்நல தேவைகளை புரிந்துகொள்ளும் முயற்சியாக இந்த நடவடிக்கையை பாருங்கள்.
இதையும் படியுங்கள்.. ஜூன் மாதத்தில் 10 நாள் வங்கி விடுமுறை... ரிசர்வ் வங்கி பட்டியல் வெளியீடு
மாதவிடாய் விடுப்பு
இதனுடன், 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ள அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் மற்றும் நிறுவனங்களில் பாதுகாப்பான குழந்தைகள் பராமரிப்பு மையங்களை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது. மகப்பேறு நலச் சட்டத்தின் கீழ் குழந்தைகள் பராமரிப்பு வசதிகளை கட்டாயமாக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், பெண்களுக்கு சம ஊதியம், ஒழுங்கற்ற துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு சிறப்பு நலன்கள், ஆறு மாத மகப்பேறு விடுப்பு, சுகாதாரப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய உதவிகள் வழங்கும் திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், ‘அனாதையற்ற கேரளா’ என்ற இலக்குடன் தத்தெடுப்பு மற்றும் வளர்ப்பு குடும்பங்களின் வலையமைப்பை உருவாக்கும் முயற்சியும் இடம்பெற்றுள்ளது. பெண்கள் பாதுகாப்பு மற்றும் சமூக நலனில் முன்னோடியாக மாறும் கேரளா நோக்கில் இந்த புதிய முயற்சிகள் தற்போது தேசிய அளவிலும் கவனம் பெற்று வருகின்றன.

