சமோசா, ஜிலேபி சாப்பிடுபவர்களுக்கு எச்சரிக்கை? மத்திய அரசு விளக்கம்
ஜிலேபி, சமோசா, லட்டு போன்ற உணவுப் பொருட்களுக்கு சுகாதார எச்சரிக்கை லேபிள்கள் இடம்பெறும் என்ற செய்தி போலியானது என PIB மறுத்துள்ளது. இந்திய தின்பண்டங்களுக்கு மட்டும் பாகுபாடு காட்டவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிலேபி, சமோசா, லட்டு சாப்பிடலாமா?
ஜிலேபி, சமோசா, லட்டு போன்ற பாரம்பரிய இந்திய உணவுப் பொருட்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் சுகாதார எச்சரிக்கை பலகைகளை வெளியிட உத்தரவிட்டதாகப் பரவிய செய்திகள் முழுக்க முழுக்க போலியானவை என மத்திய அரசின் பத்திரிகை தகவல் பணியகம் (PIB) திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
பரவிய போலி செய்தி
சமீபத்தில், சில ஊடகங்களில், புகையிலைப் பொருட்களில் இருப்பது போன்ற எச்சரிக்கை லேபிள்கள் இனி ஜிலேபி, சமோசா, லட்டு, வடை பாவ், பக்கோடா போன்ற இனிப்பு மற்றும் காரப் பண்டங்களிலும் இடம்பெற வேண்டும் என்றும், அவற்றில் உள்ள எண்ணெய் மற்றும் சர்க்கரையின் அளவு குறித்த விவரங்கள் கட்டாயமாக இருக்க வேண்டும் என்றும் செய்திகள் வெளியாகின
விழிப்புணர்வு நடவடிக்கை?
உடல் பருமன் மற்றும் அதனால் ஏற்படும் நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அந்த போலி செய்திகள் குறிப்பிட்டிருந்தன. ஆனால், இந்த தகவல்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என PIB மறுத்துள்ளது.
PIB-இன் தெளிவான மறுப்பு
PIB தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இது குறித்து தெளிவுபடுத்தியுள்ளது. "சுகாதார அமைச்சகத்தின் ஆலோசனையில், கடைகளில் விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கு எந்த எச்சரிக்கை லேபிள்களும் இல்லை. மேலும் இந்திய தின்பண்டங்களுக்கு மட்டும் பாகுபாடு காட்டவில்லை" என்று PIB வெளியிட்டுள்ள பதிவில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவறான தகவல்களைத் தவிர்க்க
எனவே, பொதுமக்கள் இதுபோன்ற தவறான மற்றும் ஆதாரமற்ற தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் PIB கேட்டுக்கொண்டிருக்கிறது. அதிகாரப்பூர்வ மற்றும் நம்பகமான அரசு ஆதாரங்களில் இருந்து மட்டுமே தகவல்களைப் பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.