உச்சத்தில் டெல்லி காற்று மாசுபாடு.. திடீர் போராட்டத்தில் குதித்த மாணவர்கள் கைது!
டெல்லியில் மோசமடைந்து வரும் காற்று மாசுபாட்டைக் கண்டித்து ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்றது. முதல்வர் ரேகா குப்தா அரசுக்கு எதிராக நடந்த இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

டெல்லி காற்று மாசுபாடு போராட்டம்
தேசிய தலைநகர் டெல்லியில் நிலவும் மோசமான காற்று மாசுபாடு மற்றும் முதல்வர் ரேகா குப்தாவுக்கு எதிராக இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஜன்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் ஜேஎன்யு (JNUSU) தலைவர்கள் உள்ளிட்டோர் டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
மோசமடைந்து வரும் காற்றுத் தரம்
டெல்லியின் நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் காற்றுத் தரத்தைக் கட்டுப்படுத்த உரிய கொள்கைகள் மற்றும் உடனடி நடவடிக்கை கோரி, இந்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இன்று மாலை தொடங்கிய இப்போராட்டத்தில், டெல்லியில் வசிக்கும் மக்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு முதல்வர் ரேகா குப்தாவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பல மாணவர்கள் மற்றும் டெல்லிவாசிகளை போலீசார் தடுத்து நிறுத்தி, இரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.
ஜே.என்.யூ. மாணவர்கள்
கைது செய்யப்பட்டவர்களில் ஜேஎன்யு மாணவர் சங்கத் தலைவர் (JNUSU President), இணைச் செயலாளர் (Joint Secretary) மற்றும் ஏஐஎஸ்ஏ (AISA DU) தலைவர் மற்றும் செயலாளர் உள்ளிட்டோர் அடங்குவர்.
கைது செய்யப்பட்டவர்களில் பல பெண் மாணவர்களும் அடங்குவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் தலைநகரில் சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தி வரும் காற்று மாசுபாட்டை உடனடியாகக் கட்டுப்படுத்தத் தவறியதாக முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான அரசு மீது போராட்டக்காரர்கள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.