எகிப்து அதிபரை அசத்திய பிரதமர் மோடி! டெல்லியில் விமரிசையான வரவேற்பு!
குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க உள்ள எகிப்து அதிபர் அல் சிசியை பிரதமர் நரேந்திர மோடியும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் நேரில் சந்தித்து வரவேற்றனர்.
74வது குடியரசு தினவிழா டெல்லியில் நாளை கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. இதில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ தேசியக் கொடியை ஏற்றிவைப்பார். பிரதமர் நரேந்திர மோடியும் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார்.
இந்த விழாவில் கலந்துகொள்ள எகிப்து நாட்டு அதிபர் அல் சிசி இந்தியா வந்துள்ளார். புதன்கிழமை தலைநகர் டெல்லிக்கு வந்த அவரை பிரதமர் நரேந்திர மோடியும், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் சந்திது வரவேற்றனர்.
எகிப்து அதிபர் வருகையை முன்னிட்டு டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் சிறப்பு வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
ராஷ்டிரபதி பவனில் நடந்த நிகழ்ச்சியின்போது பிரதமர் நரேந்திர மோடி எகிப்து அதிபர் அல் சிசியை கட்டித்தழுவி தன் வரவேற்பைத் தெரிவிக்கிறார்.
எகிப்து அதிபரை வரவேற்கும் இந்த நிகழ்ச்சியில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் கலந்துகொண்டார். அல் சிசியுடன் கை குலுக்கி அவரை வரவேற்கிறார்.
வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய அல் சிசி, “எகிப்து – இந்தியா இடையேயான உறவு சீராகவும் நிலையாகவும் தொடர்கிறது. ஆக்கபூர்வமான முன்னேற்றங்கள் மட்டுமே நிகழ்ந்துள்ளன. நாம் நேர்வழியில் முன்னேறி வருகிறோம். இந்திய நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் என் வாழ்த்துகளைக் கூறிக்கொள்கிறேன்” என்றார்.
வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.