- Home
- இந்தியா
- இனி 45 நாட்களுக்கு ஒருமுறைதான் சிலிண்டரா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு.. விளக்கம்!
இனி 45 நாட்களுக்கு ஒருமுறைதான் சிலிண்டரா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு.. விளக்கம்!
சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக கடந்த சில நாட்களாக, எல்பிஜி சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான கால வரம்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் பரவின. இது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

கேஸ் சிலிண்டர்கள் தட்டுப்பாடு
மேற்கு ஆசிய நாடுகளில் நடந்து வரும் போர் காரணமாக உலகம் முழுவதும் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்தியாவில் வணிக கேஸ் சிலிண்டர்கள் மட்டுமின்றி வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கும் தட்டுப்பாடு உள்ளது. இதன் காரணமாக ஹோட்டல்கள் மூடப்பட்டு வருகின்றன.
சிலிண்டர் புக்கிங் விதிகளில் மாற்றம்?
சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக கடந்த சில நாட்களாக, எல்பிஜி சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான கால வரம்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் பரவின. அதாவது இரண்டு சிலிண்டர் இணைப்பு வைத்திருப்பவர்கள் 35 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். உஜ்வாலா (PMUY) திட்டப் பயனாளிகள் 45 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். ஒற்றை சிலிண்டர் வைத்திருப்பவர்கள் 25 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என சிலிண்டர் புக்கிங் விதிகள் மாறியதாக பல்வேறு தகவல்கள் உலா வந்தன.
மத்திய அரசு விளக்கம்
இந்த நிலையில், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் சிலிண்டர் புக்கிங் தொடர்பாக வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தற்போதுள்ள மறுநிரப்பு முன்பதிவு காலக்கெடு மாற்றமின்றி தொடர்கிறது எனவும் விளக்கம் அளித்துள்ளது. சில செய்தி அறிக்கைகள் மற்றும் சமூக ஊடகப் பதிவுகள், PMUY இணைப்புகளுக்கு 45 நாட்கள், PMUY அல்லாத ஒற்றை சிலிண்டர் இணைப்புகளுக்கு 25 நாட்கள் மற்றும் PMUY அல்லாத இரட்டை சிலிண்டர் இணைப்புகளுக்கு 35 நாட்கள் என LPG மறுநிரப்பு முன்பதிவு காலக்கெடு திருத்தப்பட்டதாகக் கூறுவது அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. அத்தகைய மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. வதந்திகளை நம்ப வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.
இப்போது உள்ள புக்கிங் விதிகள் என்ன?
தற்போதைய நடைமுறையில் உள்ள விதிகளின்படி நகர்ப்புறங்களில் சிலிண்டர் முன்பதிவு செய்ததிலிருந்து அடுத்த பதிவிற்கு இடைப்பட்ட காலம் 25 நாட்கள் ஆகும். கிராமப்புறங்களில் விநியோகச் சங்கிலியைக் கருத்தில் கொண்டு, அடுத்த முன்பதிவுக்கான கால இடைவெளி 45 நாட்கள் ஆகும். இந்த விதிகள் தொடர்கின்றன. புதிதாக ஏதும் மாற்றப்படவில்லை என விளக்கம் அளித்துள்ள பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், நாட்டில் போதிய அளவு கேஸ் சிலிண்டர் இருப்பு உள்ளது. எனவே, பொதுமக்கள் தேவையற்ற பயத்தில் சிலிண்டர்களை முன்கூட்டியே முன்பதிவு செய்ய வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.

